உழைப்பு மகத்தானது. உழைப்பையே மூலதனமாகக் கொண்டு சமூகத்தில் உன்னத நிலையை அடைந்த ஏராளமானவர்களை நாம் அறிவோம். அப்படிப்பட்டவர்களில் ஒருவந்தான் ’மிட்டா’ என்ற இந்த வரலாற்றுப் புதினத்தின் நாயகன் வேம்பன். கி பி 1876இல் இந்தியாவில் பெரும் பஞ்சம் ஒன்று ஏற்பட்டு 56 லட்சம் மக்கள் மாண்டு போனார்கள் என்பது சரித்திரம் . அதன் தொடர்ச்சியாகத் தமிழ்நாடும் பெரும் பஞ்சம் ஒன்றை எதிர் கொள்ள நேரிட்டது. அந்தக் காலகட்டத்தில் பதிநான்கு வயதுச் சிறுவனாகத் தன்னந்தனியாக வசவப்பநேரி என்ற குக்கிராமத்திலிருந்து திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகரான திருவனந்தபுரத்திற்குப் புறப்பட்டுச் சென்றான். கடும் உழைப்பினால், திருவிதாங்கூரின் மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவராக மாறிய வேம்பனின் வரலாற்றை 1884இல் காலத்தில் ஆரம்பித்துப் பேசுகிறது உண்மையும் கற்பனையும் கலந்த இந்த வரலாற்றுப் புதினம் மிட்டா .