சூஃபித்துவம் என்பது இஸ்லாமியர்களுக்கு மட்டுமேயானது அல்ல. அது உலகம்
முழுவதற்குமானது. சாதி, மதம், இனம், மொழி, பாலினம் என்று தொடங்கி அனைத்து
வேறுபாடுகளையும் கடந்து ஒட்டுமொத்த மானுட குலத்தையும் அணைத்துக்கொள்ளும்
ஆற்றல் அதற்கு உள்ளது. அதனால்தான் மேற்குலக நாடுகளும் அறிந்துகொள்ளும்
வண்ணம் சூஃபித்துவத்தை அங்கு அறிமுகப்படுத்தினார் ஹஸ்ரத் ஆஸாத் ரஸூல்.
சத்தியத்தின் பாதை எந்த மதத்துக்கும் சொந்தமானதல்ல என்னும் கொள்கை கொண்ட
ஹஸ்ரத் ஆஸாத் ரஸூல் அதை மானுடத்தின் கரங்களில் ஒப்படைத்து விடவேண்டும்
என்பதையே தன் வாழ்நாள் பணியாகக் கொண்டிருந்தார். நாகூர் ரூமியின் இந்நூல்
ஹஸ்ரத் ஆஸாத் ரஸூலின் அற்புதமான வாழ்வையும் அவருடைய ஞானத் தேடல்களையும்
எளிமையாகவும் சுவையாகவும் அறிமுகப்படுத்துகிறது. இந்திய சூஃபி மெய்யியல்
வரலாற்றில் ஆர்வமுள்ள அனைவரும் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டிய ஒரு
பொக்கிஷம் இந்நூல்.