மருத்துவம் மற்றும் உடல்நலம் குறித்து நிறைய நூல்கள் எழுதப்பட்டு
இருக்கின்றன. இன்னமும்கூட நிறைய எழுதப்படும். காரணம், மக்கள் தொகை
பெருக்கத்துக்கு இணையாக வெவ்வேறுவிதமான நோய்கள் மனித இனத்தைத் தாக்கிய
வண்ணம் இருக்கின்றன. வணிக ரீதியான இன்றைய வாழ்க்கைச் சூழலில், உடல்நலத்தைப்
பற்றிக் கவலைப்படாமல், செல்வ வளத்தைச் சேர்ப்பதிலேயே நாம் குறியாக
இருக்கிறோம். அதே நேரத்தில், நோய், நொடி ஏதுமின்றி நமது வாழ்க்கை பயணிக்க
வேண்டும் என்றும் விரும்புகிறோம். மருத்துவர்களை நாடுகிறோம்; மருத்துவ
நூல்களைப் படிக்கிறோம். நோய்கள் வராமல் காக்கவும், வந்துவிட்டால்
குணப்படுத்தவும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய எளிய
செயல்முறைகளையும், சிக்கனமான மருத்துவ முறைகளையும் அனைவருக்கும் புரியும்
வகையில் இந்த நூலில் எழுதியிருக்கிறார் டாக்டர் பெ.போத்தி. மனித உடலில்
உள்ள ஒவ்வோர் உறுப்புக்கும் வரக்கூடிய நோய்கள்... அதற்கான மருந்துகள்...
மருத்துவமுறைகள்... நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகள்... நடைமுறை வாழ்க்கையில் உள்ள ஆரோக்கியமற்ற சூழ்நிலைகள்...
இப்படி பல்வேறு விவரங்களை எளிய நடையில் விவரித்துள்ளார். ‘மண்டை இருக்கும்
வரையில் சளி விடாது’ என்பதுபோல, மனித உடல்களில் பல்வேறு விதமான நோய்கள்
இருக்கத்தான் செய்கின்றன. இருப்பினும், அதன் உபாதைகள் நம்மைத் தாக்காமல்
இருப்பதற்கான வழிகளை இந்த நூலில் படிக்கும்போது, நாம் ஆரோக்கிய வானில்
மிதப்பது போன்ற உணர்வு ஏற்படும். வாழ்க நலமுடன்... வாழ்க வளமுடன்!