தமிழ்
இலக்கியங்களில் உள்ள சுவையான செய்திகளையும், பல கவிஞர்களின் கவிதை
நயங்களையும் விளக்கும் கட்டுரைகள் அடங்கிய நுாலிது. இரா.மோகனின்
எழுத்தாற்றலைக் கூறும் நுாலாக விளங்குகிறது. கவிதைத் துறைமுகம்,
செவ்விலக்கியப் பேழை, சான்றோர் அலைவரிசை, தன்னம்பிக்கை முனை என ஆறு
பகுதிகளில், 36 கட்டுரைகள் உள்ளன.
தடுக்கி
விழும் இடங்களில் எல்லாம் டாஸ்மாக், பிறகெப்படி பண்பாட்டிற்கு கிடைக்கும்
பாஸ் மார்க்?’ என, தி.மு.அப்துல்காதர் கவிதையைப் பாராட்டுவதும், ‘வந்து
நின்று வாக்கு கேள், உட்கார்ந்தபடி ஊழல் செய், படுத்தபடி ஜாமீன் கேள்’
என்று கடவுளின் நின்ற கோலம், அமர்ந்த கோலம், படுத்த கோலத்துடன் கவிஞர்
சு.முத்துவின் ஹைக்கூவை ரசிப்பதும், திருவள்ளு-வரின் பெரும்பாலான அரசியல்
சிந்தனைகள், இன்றைய குடியாட்சிக் காலத்திற்கும் ஏற்புடையன என்று ஒரு
கட்டுரையில் விளக்குகிறார்.
அப்பர்
சுவாமிகளின் ஆளுமைப் பண்புகளுள் தலையாயது அவரது அஞ்சாமைப் பண்பு என்று
விளக்குவதும், பாரதியார் போற்றும் தெய்வ வாழ்வைத் தாங்கி நிற்கும் ஆறு
வலிமையான துாண்களாக அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி, அகத்திலே அன்பு,
ஐம்பொறி ஆட்சி, பேரருளின் நெறியிலே நாட்டம், கருமயோகத்தில் நிலைத்திடல்
என்று கூறுவதும், நுாலாசிரியரின் ஆய்வுத் திறனுக்குச் சான்றுகள்.
எழுத்தாளர் பற்றி:
பேரா.இரா.மோகன் பட்டிமன்றங்களில் மக்களின் வரவேற்பை பெற்று தனக்கென தனி
முத்திரையை பதித்த ஜோடி பேராசிரியர் இரா.மோகன் மற்றும் அவரது மனைவி நிர்மலா
மோகன். தமிழ் பேராசியர்கள், தமிழக அரசு விருது பெற்ற தம்பதிகள், இலக்கிய
எழுத்தாளர்கள், ஆய்வு வழிகாட்டிகள் என்று பன்முக ஒற்றுமைகளை
உடையவர்கள்.அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும், தமிழ்நாடு அறக்கட்டளையும்
இணைந்து இவருக்குத் 'தமிழ்ச் சுடர்' (2002) என்ற விருதினை வழங்கியுள்ளன.
புதுதில்லி சாகித்திய அகாதெமியின் தமிழ் மொழிப் பொதுக்குழு உறுப்பினர்,
இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத் தலைவர், மதுரை காமராசர்
பல்கலைக்கழகத் தமிழியற் புலத் தகைசால் பேராசிரியர், தமிழக அரசின்
முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருதாளர்' (2012 ) முதலான பல்வேறு
சிறப்புக்களையும் பெற்றவர் பேராசிரியர் மோகன் என்பது குறிப்பிடத்தக்கது.