எழுத்தாளர் தமது முன்னுரையில் சிறுகதைக்கும் குறுங்கதைக்கும் உள்ள வித்தியாசத்தை அழகாக உணர்த்திவிடுகிறார். இத்தொகுப்பில் மொத்தம் 41 கதைகள் இடம் பெற்றுள்ளன.
இக்குறுங்கதைத் தொகுப்பில் ஒரு பக்க அரைப் பக்க கதையெல்லாம் கூட உண்டு. நரகத்தில் ஒரு நாள் என்ற அரைப் பக்க கதை படித்தவுடன் சிரிப்பை வரவழைக்கும்.
Artificial Intelligence கதையான மிகைல் AI அருமை. நாலு வரியில் கூட ஒரு கதை எழுதியுள்ளார். ஹைக்கூ கதைகள் போலும். அதில் எனக்கு பிடித்த ஒன்று கோபம் எனும் கதை. புத்தகம் அடுக்கில் இருந்த உருமாற்றம் நாவலிலிருந்து யாரோ கதறும் சத்தம் கேட்டது. திறந்து பார்த்தேன். காஃப்கா அவரின் அப்பாவை வெளுத்துக்கட்டி கொண்டிருந்தார். இவ்வளவு தான் கோபக் கதை.
மிடில் க்ளாஸ் கதை வாசிக்கும் பொழுது ஆனந்த விகடனில் வைக்கும் போட்டிகள் தான் நினைவில் வந்து சென்றது. ஆம் ஒரு பக்க கதை போல் ஒரு வரி கதையிது. வீடு கட்டினான், திருமணம் முடித்தான். இவ்வளவே கதை. இந்த மாதிரி ஒரு வரி கதையெல்லாம் குறுங்கதை வகையில் சேருமா.
ஏழு நிமிடங்கள் என்ற கதை செவ்வாய் கிரகத்தில் விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கி ஆராய்ச்சி செய்வதுப் பற்றிய குறுங்கதை அருமை. கொரோனா வைரஸ் பற்றிய கதையும் உண்டு.
நரகம் என்ற கதை காதலித்து திருமணம் செய்த ஒரு குடிநோயாளியின் மனைவி மற்றும் குழந்தைகள் பற்றியது. மிகவும் பாதித்த வரிகள் அப்பா குடிச்சிட்டு வரக்கூடாது. சண்ட வரக் கூடாது என்று நூறு முறைக்கும் மேலாக கடவுளிடம் மன்றாடும் சிறுவன் நிலை பரிதாபத்துக்குரியது.
காதல்காரியும் ஒரு கடிதமும் ஒன்றுக்கொன்று போட்டிப் போட்டுக் கொண்டு இழந்த காதலின் சோகத்தை பறைசாற்றுகிறது. புத்தகத் தலைப்பான மஜ்னூன் அழகான கற்பனைக் கதை. லைலா மஜ்னூன் காதலை வேறு கோணத்தில் சொல்கிறார் நரேஷ்.
பிணந்தின்னிகள் உணர்ச்சி மிகுதியால் வாசிக்க முடியவில்லை. இன்னும் எத்தனை காலத்திற்கு பெண்களை இப்படி வதைப்பார்கள் இந்த பிணந்தின்னிகள் என்ற எண்ணம் தான் மேலோங்கியது.
சித்தார்த்தனின் பாவங்கள் என்ற கடைசிக் கதை சிந்திக்க வைக்க கூடியது. இக்கதையில் வருவது போல் சித்தார்த்தன் தனது குடும்பத்தை நினைத்து துறவறம் மேற்கொள்ளாமல் இருந்திருந்தால் நமக்கு புத்தர் கிடைத்திருக்க மாட்டார் அல்லவா..
எளிதில் வாசிக்க கூடிய குட்டி குட்டி கதைகளை உள்ளடக்கிய இத்தொகுப்பை அனைவரும் வாசிக்கலாம்