
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.67

Opening the world of stories

இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு' எனும் இந்த ‘தவத்தில்' பதினாறு வருடங்கள் சிவசங்கரி தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார்.
இந்தியர்களை இதர இந்தியர்களுக்கு அறிமுகப்படுத்தி, ஒவ்வொருவரது இலக்கிய மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்தைத் தெரிந்துகொள்வதன் மூலமாக அவர்களை ஒருங்கிணைக்க முனைவதே அவரது மாபெரும் இம்முயற்சியின் நோக்கம். இதற்காக அவர், நாட்டின் பல பகுதிகளுக்குப் பிரயாணம் செய்திருக்கிறார். பல்வேறு கலை, கலாச்சாரப் பின்னணிகளைப்பற்றி அறிய முயன்றிருக்கிறார். அந்தந்தப் பிராந்திய மொழிகளின் இலக்கியங்களைப் பற்றி ஆராய்ந்து விவரங்களைச் சேகரித்திருக்கிறார். ஒவ்வொரு மொழியிலும் பல முன்னணி எழுத்தாளர்களைப் பேட்டி கண்டிருக்கிறார். வெவ்வேறு மொழி இலக்கியப் படைப்புக்களிலிருந்து சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்துத் தருவதோடு, அவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளையும் இத்தொகுப்புகளில் இணைத்திருக்கிறார்.
அவர் சந்தித்துள்ள படைப்பாளிகள் அனைவருமே தாங்கள் இந்தியராக இருப்பதில் பெருமிதம் கொள்பவராக இருப்பதோடு மட்டுமல்லாமல், நம் தேசத்தில் இன்று நிலவும் பிரச்சினைகள் குறித்து அக்கறை கொண்டவர்களாகவும் இருக்கும் ஒற்றுமையை, அவரது பயணக்கட்டுரைகள், பேட்டிகள், மொழிபெயர்த்துள்ள ஆய்வுக்கட்டுரைகள் வெளிப்படுத்துகின்றன. ஏழ்மை, அறியாமை, சாதி வர்க்க ஆண்/பெண் பால் பேதங்கள், நவீனத்துவம் எதிர்நோக்கியுள்ள சவால்கள், மதமாச்சர்யங்களின் எழுச்சி, கொள்கைவெறி, மூடநம்பிக்கை மற்றும் பொறுமையின்மை, சட்டமீறல், வன்முறை மற்றும் காந்திய மதிப்புகள் போன்றவற்றின் சீரழிவைக் குறித்த விழிப்புணர்வை முடிந்தவரையில் உண்டாக்கி, மக்களின் சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்தி, வலிமையான இந்தியாவை உருவாக்க எழுத்தாளர்களால் இயலும் என்பது சிவசங்கரியின் நம்பிக்கை.
இம்முதல் தொகுப்பில், 27 எழுத்தாளர்களது பேட்டிகளும் அவர்களின் படைப்புக்களும் இடம்பெறுகின்றன. ஒவ்வொரு பேட்டியும் ஒரு சிறந்த இலக்கியவாதியின் ஆழ்ந்த பார்வை, சிந்தனைகளை வெளிப்படுத்துவதோடு, ஒவ்வொரு படைப்பும் மொழிபெயர்ப்பில் சிதைந்துவிடாத ரத்தினமாகவும் திகழ்கின்றன.