தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்கள் வரிசையில் தனக்கெனத் தனியிடமும்
தனித்திறனும் பெற்றவர் எம்.எஸ்.விஸ்வநாதன். ஏறத்தாழ அரை நூற்றாண்டுக் காலம்
தமிழ்த் திரையுலகை, தன் இனிமையான பாடல்களால் தாலாட்டியவர் எம்.எஸ்.வி.
ஒருவரின் அனுபவம் பலருக்கும் சுவாரஸ்யமாகவும் பல புதிய வாழ்க்கைத்
தத்துவங்களை உணர்த்துவதாகவும் அமையும். இசையையே தன் வாழ்வாகக்கொண்ட
எம்.எஸ்.விஸ்வநாதன், தன் இசை அனுபவ வாழ்க்கைப் பயணத்தை இசைக்கோட்டையாகக்
கட்டியிருக்கிறார் இந்த நூலில். பள்ளி வயதிலேயே பாடத்தை விட இசை தன்னை
ஈர்த்ததால் இசையோடு தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டவர் அவர். திரைப்படத்
தயாரிப்பு அலுவலக உதவியாளராக, ஆர்கெஸ்ட்ரா உதவியாளராக.. இப்படி எந்தப் பணி
செய்தபோதும் இசை மீதான தன் ஆர்வத்தை அடைகாத்து வந்ததால்தான் அவரால் இசையில்
தனித்து நின்று சாதனை செய்ய முடிந்தது. தன் இளமைக் காலம் முதல், தான்
இசைத் துறைக்கு வர எடுத்துக்கொண்ட முயற்சிகள், வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட
நிகழ்வுகள், சினிமாவின் பெரும் ஆளுமைகளுடான தன் அனுபங்கள் பற்றியெல்லாம்
`நான் ஒரு ரசிகன்' எனும் தலைப்பில் ஆனந்த விகடனில், 1993-94-ம் ஆண்டுகளில்
எம்.எஸ்.விஸ்வநாதன் எழுதிய தொடர் கட்டுரைகளே இப்போது நூலாகியிருக்கிறது.
எம்.எஸ்.வி எனும் மனையங்கத்து சுப்ரமணியன் விஸ்வநாதன் என்ற சாமானியன்,
இசைத் துறையில் ஈடு இணையற்ற நிலைக்கு எப்படி உயர்ந்தார் என்பதை இந்த நூல்
எடுத்துரைக்கிறது. எம்.எஸ்.வியின் வாழ்க்கையை ரசிக்க வாருங்கள்...