நூலாசிரியர் எர்னெஸ்ட் பிளாக் ஜெர்மானிய யூத அறிஞர். ஒடுக்கப்பட்ட மனிதர்களின் கனவுகளே பெரும்பாலும் பண்பாட்டு மரபுகளில் புதைந்து கிடக்கின்றன என்பதால், அவற்றை எதிர்வர இருக்கிற சோசலிச சமுதாயத்துக்காகப் பாதுகாத்து வைக்க வேண்டும் என்று இந்நூலில் அறிவுறுத்துகிறார் எர்னெஸ்ட் பிளாக் மானுடமும் செயலாற்றலும் நிறைந்த இளம் மார்க்சின் பண்பு, தத்துவவாதியாக மார்க்ஸ் உருவாதல், தனிமனிதனின் பாத்திரத்தின் மீது மார்க்சின் ஆய்வு ஆகிய விடயங்கள் நூலின் முற்பாதியில் நிரம்பியுள்ளன.
இந்தியாவில் மானுடத்தில் மிகவும் கறாராக இருந்த கருத்துமுதல்வாதிகளை இந்நாட்டு அடித்தட்டு மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். அவர்களுடைய ஏக்கங்களும், கனவுகளும்தான் அவர்களை இறையியலை நோக்கித் தள்ளுகின்றன. இந்நிலையும், 'இலக்குகள் முழுமையடையாத வரையில் புரட்சிகளில் கற்பனைகளுக்கும், நம்பிக்கைகளுக்கும் - அவை கருத்துமுதல்வாதப் போக்கு போலத் தோன்றினாலும் தாராளமாக இடமுண்டு' என்ற எர்னெஸ்ட் பிளாக்கின் கோட்பாடும் ஏறத்தாழ ஒரே தன்மையுடையவை. மொழிபெயர்ப்பாளர் பொன். சின்னத்தம்பி முருகேசன் திண்டுக்கல் மாவட்டம் மேலக்கோட்டை என்கிற அம்பாத்துரை கிராமத்தில் பிறந்தவர். இயற்பியலின் தாவோ என்கிற இவரது மொழிபெயர்ப்பு நூல் திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் விருதினையும் தமிழ்நாடு அரசின் வழங்கிய பரிசினையும் பெற்றது. ரஸவாதி, உலகப்பேருரைகள், மார்க்கோ போலோ பயணக்குறிப்புகள், புதியதோர் உலகம் செய்வோம், போர்க்கலை, யுவான்சுவாங் இந்தியப் பயணம், முதல்விடுதலைப்போர், வேர்கள், சுற்றுச்சூழலியல் ஓர் உலகம் தழுவிய வரலாறு போன்ற 27 நூல்களை மொழிபெயர்த்துள்ளார். யுவான் சுவாங் இந்தியப் பயணம் நூலுக்கு நல்லி திசை எட்டும் அமைப்பின் விருது கிடைத்தது. தமிழ்நாடு அரசு 2017ஆம் ஆண்டு சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது வழங்கி ஒரு லட்ச ரூபாய் பரிசு வழங்கியது.