ஆரியக் கடவுள் கதைகளால் பெருமதத்துள்ளும் பெருந்தேசியத்துள்ளும் உட்செறிக்கப்பட்ட தமிழ்த்தேசிய இனம் மொழியினத் தூய்மை நடவடிக்கையால், அவ்விரண்டிலிருந்தும் விடுத்துக்கொள்ள முடியும் எனத் தனித்தமிழியக்கம் கருதியிருப்பதாகக் கொள்ளலாம்.
பக்தி இயக்கத்தவர் 'மன்னனின் மதமாற்றம்' என்ற உத்தியின் வழி நிலைநாட்ட முயன்ற தமிழ்க்காப்பைத் தனித்தமிழ் இயக்கத்தவர் 'மக்களின் மனமாற்றத்தின் மூலம் நிறைவேற்ற முயன்றனர். அதில் பெருவெற்றியும் பெற்றுள்ளனர். பக்தி இயக்கத்தவரின் தமிழ் வளர்ச்சிப் பணியைவிடத் தனித்தமிழ் இயக்கத்தினரின் தமிழ்வளர்ச்சிப் பணி பன்மடங்கு மேம்பட்டது.