மகாராஷ்டிர மாநிலத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் அவதரித்த ஆன்மிகத்
தலைவர்களில் ஒருவர் சமர்த்த ராமதாசர். ஆன்மிகத் தலைவர் என்றாலும் ராமதாசர்
அரசியலிலும் ஈடுபாடு காட்டினார். அன்றைய முகலாயர்களின் தாக்கத்தால் இந்து கலாசாரம்
சீரழிவதைப் பார்க்கப் பொறுக்காமல், அதைத் தடுப்பதற்கு அவர் அரசியலிலும் அக்கறை
காட்டி வெற்றியும் கண்டார். அரசியலில் ஈடுபடும் எந்தவொரு ஆன்மிகத் தலைவருக்கும்
மக்களிடையே சிறிது செல்வாக்கு குறையும். ஆனால் ராமதாசர் மீது மக்கள் வைத்திருந்த
செல்வாக்கில் ஒரு மாற்றுகூடக் குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நூலில்
ராமதாசரின் வாழ்க்கை சம்பவங்களை நூலாசிரியர் ஜெ.பிரபாகர் விவரித்திருக்கிறார்.
சத்ரபதி சிவாஜியின் குருவாக இருந்து அவர் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கப் பக்கபலமாக
இருந்தவர் ராமதாசர். கணவனை இழந்த பெண் ஒருத்தி உடன்கட்டை ஏறுவதற்கு முன்னால்,
“எட்டு பிள்ளைகளைப் பெறுவாயாக!” என்று ராமதாசர் ஆசீர்வதிப்பதைப் படிக்கும்போது
திக்கென்கிறது. மேற்கொண்டு படிக்கும்போது ஆச்சரியத்தால் நம் கண்கள் விரிகின்றன.
இதைப் போன்ற சம்பவங்களும், நூலாசிரியரே வரைந்த ஓவியங்களும் இந்த நூலுக்கு
விறுவிறுப்பையும் பொலிவையும் கூட்டுகின்றன.