'சாலையின் திருப்பம்' தொகுதியிலூள்ள ஒவ்வொரு கதையும் சில வரிகளில் சுருக்கிச் சொல்லி,'இது இப்படி''அது அப்படி' என்று பூவின் இதழ்களைப் பிய்த்து பூவின் தன்மையகளை விளக்கும் பொல்லாத காரியத்தைச் செய்ய நான் ஒரு விமர்சகன் அல்ல. மனித உணர்ச்சிகளை,அதன் முரண்பாடுகளை மனிதக் கண்கொண்டு பார்த்த ஓர் அனுபவத்தை மண்ணின் வாடையோடு நமக்கு உணர்த்துகிறார் ஆசிரியர். சில கதைகள் இவரது உள்நோக்கத்தை படீரென்று வெளிக் கொணர்ந்து இவரையே காட்டிக் கொடுத்து விடுகிறது. அங்கே கலைஞனை மீறிய ஒரு கருத்து வலிந்து முன்வருவதை நான் காண்கிறேன். இந்தக் குணம் (குறை என்று சொல்ல மாட்டேன்) ஒரு தத்துவத்தை ஏற்றுக்கொண்ட முதுகெலும்புள்ள கலைஞர்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலத்தில் இருப்பது இயல்பே. போகப் போக தத்துவங்கள் நெஞ்சில் உரமாக காலூன்றிய பிறகு நமக்கு ஒவ்வொரு பார்வையிலும் அசைவிலும் அத் தத்துவரஸம் இரண்டறக் கலந்த பிறகு அது அவ்விதம் தனித்துத் தெரிவதில்லை. இது போன்ற வளர்ச்சியின் அறிகுறிகளும் நண்பரின் கதைகளில் இடம்பெற்று வருவதை நான் பார்த்து மகிழ்கிறேன்.