தமிழ் இலக்கியக் காலங்களுள் குறிப்பிடத்தக்க சிறப்பும் பெருமையும் உடையது
இடைக்காலம் என்றழைக்கப்படும் பக்தி இலக்கியக் காலம். இக்காலத்தில்
நாயன்மார்கள் எனப்படும் சைவ அடியார்களும் வைணவ ஆழ்வார்களும் தோன்றிப் பக்தி
இலக்கியங்கள் பலவற்றைப் படைத் தளித்தனர். அவ்வாறாகப் படைக்கப்பட்ட
இலக்கியங்கள் சைவ சமயத்தில் திருமுறைகள் என்றும் வைணவ இலக்கியங்கள் திவ்விய
பிரபந்தம் என்றும் அழைக்கப் படுகின்றன. சைவ சமய வளர்ச்சிக்குத்
தொண்டாற்றிய அடியார்கள் தனியார்கள் தொகை அடியார்கள் என எழுபத்து இரண்டு
பேர்களாவர். அவர்களுள் பெண் அடியார்களுள் ஒருவர் புனிதவதி என்னும்
இயற்பெயர் கொண்ட காரைக்கால் அம்மையார். இறைவனை வேண்டிப் பேய் உருவம் பெற்ற
இவர் சிவபெருமானால் 'அம்மையே', என்று அழைக்கப்பட்ட சிறப்புடையவர்.
அம்மையார் கல்லும் கசிந்துருகும் பக்திப் பாக்களை இயற்றி சிவபெருமானை
வழிபட்டவர். இனிமையான பாக்கள் பலவற்றைக் கொண்ட இவருடைய இலக்கியம் அற்புதத்
திருவந்தாதி. இந்நூல் அந்தாதி இலக்கியங்களுள் முதலாவது என்னும் பெருமையைப்
பெறுவதோடு திருமுறைகளுள் பதினொன்றாம் திருமுறையில் இடம் பெற்றிருக்கிறது.
பக்திச் சிறப்பும் இலக்கியச் சுவையும் உடைய இவ்விலக்கியத்தைக் கற்று இறை
உணர்வும் இலக்கியப் பயனும் பெறுவோம். என் உயர்வில் மகிழ்ச்சி கொள்ளும்
சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மொழித்துறைப் பேராசிரியர் முனைவர் மு.
பொன்னுசாமி அவர்களுக்கு என் நன்றி. நூலைச்சிறந்த முறையில் வெளியிட்ட சாரதா
பதிப்பகத்திற்கு நன்றி. இந்நூலைத் தமிழ்கூறும் நல்லுலகம் ஏற்றுப் போற்றுமென
நம்புகிறேன்.