பெரிய புராணத்தில் சில பகுதிகளை மட்டும் முதன்முதலாகப் பதிப்பித்தவர் மழவை மகாலிங்க ஐயர் ஆவார். இப்பதிப்பு 1843-இல் வெளி வந்தது. காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியார் பதிப்பு 1859-லும் பே.இராமலிங்கம் பிள்ளை பதிப்பு 1879-லும், ஆறுமுக நாவலரின் பதிப்பு 1884-லும் வெளிவந்தன. திருவண்ணாமலை ஆதீனம் ஆறுமுகத்தம்பிரான் சில பகுதிகளுக்கு மட்டும் பதவுரை எழுதி வெளியிட்டார். 1893-ல் சுப்பராய நாயகர் பதவுரை, விளக்கம் எழுதி வெளியிட்டார். இப்பேரறிஞர் பல நூல்களுக்குப் பேருரை எழுதினார். 127 ஆண்டுகளுக்குப் பின் இவ்வுரை வெளிவருகிறது. தெளிவான உரை, எல்லோரும் படித்துப் புரிந்து கொள்ளக் கூடிய எளிய நடை.
'திருமுறை' என்ற சொல், தெய்வத்தன்மை, அழகு, அருள். செல்வம் போன்றவைகளைக் கொண்ட பனுவல் என்று பொருள். சைவத் திருமுறைகள் பன்னிரண்டு என்பது தெரியும். அதில் பன்னிரண்டவதாக வைத்தெண்ணப்படுவது பெரியபுராணம். இந்த நூலை திருத்தொண்டர் புராணம் என்றும் கூறுவர். அறுபத்து மூன்று தனி அடியார்களைப் பற்றியும், ஒன்பது தொகையடியார்களைப் பற்றியும் வரலாற்றுப் பாடல்களைக் காண்டங்களையும், பதின்மூன்று சருக்கங்களையும், 4286 பாடல்களையும் கொண்ட தெய்வப் பனுவல்.