இவ்வுலக இன்பங்களைத் துய்க்கும் ஆசையை மனிதனுக்குள் வளர்ப்பது அடிப்படையில் அவன் கண்ணால் காணும் காட்சிகள். அவ்வாறு "கண்டதே காட்சி கொண்டதே கோலம்" எனும் விதத்தில் வாழ்வதைத் தவிர்த்து தன் பகுத்தறிவை உபயோகித்து விபரீத ஆசைகளை அடக்கி நல்வழியில் நடக்காதவன் வாழ்வில் மாபெரும் துன்பங்களை அனுபவிப்பது உறுதி. இவ்வுண்மையை விளக்கப் போதுமான ஆதாரங்கள் சரித்திரங்கள் வாயிலாகவும் கதைகள், காவியங்கள் வாயிலாகவும் கிடைக்கின்றன. மனத்தின் ஆசைகளை அடக்கி ஒழுக்க சீலர்களாய் வாழ்ந்தோர் உன்னத நிலையை அடைவதையும் நாம் கண்கூடாகக் காண்கின்றோம். "வாழ்க்கை வாழ்வதற்கே", "இருப்பது சில நாள் அனுபவிப்போமே எது தான் குறைந்து விடும்?" என்பன போன்ற சந்தர்ப்பவாதத் தத்துவங்களைப் பேசிக்கொண்டு இளமையில் சிற்றின்பத்தை நாடிச் செல்வோர் பிற்காலத்தில் அதனால் ஏற்பட்ட கேட்டினால் மனம் வருந்தி உருக்குலைந்து போனதற்கும் நிறைய ஆதாரங்கள் உள்ளன.
வாழ்க்கை நாம் வாழ்ந்தே தீர வேண்டும், வேறு வழி கிடையாது, ஏனெனில் உலகம் நம்மைக் கேட்டு இயங்கவில்லை. நம்மைக் கேட்டு நாம் பிறக்கவில்லை. நம் செயல்கள், சொற்கள், வாழ்க்கை நிகழ்ச்சிகள் அனைத்தும் சூழ்நிலைகளைக் கொண்டே அமைகின்றன. அத்தகைய சூழ்நிலைகள் நல்லவையாகவும் நிரந்தர இன்பம் தருவனவாகவும் இருப்பதற்கு மனிதன் தனது எண்ணத்தையும் நோக்கத்தையும் அதற்கேற்றவாறு அமைத்துக்கொண்டு வாழ வேண்டும். அவ்வாறு நல்வாழ்வு வாழும் மனிதன் அனைவராலும் போற்றப்படும் உன்னத நிலையடைவது உறுதி.