இன்றைய குழந்தைகளுக்கான படைப்புகளான, கதைகள், பாடல்கள், நாடகம், துணுக்குகள், படக்கதை, புதிர்கள், காணொலிகள், குறும்படங்கள் என அனைத்திலும் பெரும்பாலும் நீதிபோதனையைவிட பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்தவைகளாக இருப்பவைகளே பெரிதும் வரவேற்கப்படுகின்றன. குழந்தைகளுக்கான படைப்புகள் என்றபோதும் அவை மற்ற அனைத்துத் தரப்பினரையும் கவருவதாகவே அமைகின்றன என்பதே சிறப்பு. பழங்கதைகளை ஊடுறுவிப்பார்க்கும்போது குழந்தைகள் இலக்கியங்களின் தேவைகள், படிப்பினைகள் என பலவற்றையும் அறிந்துணரக்கூடும்.
நம் ஆதிகால குழந்தை இலக்கியங்கள் அனைத்தும் வாய்மொழிக் கதைகளாகவே இருந்ததால் எழுத்து வழி இலக்கியங்களின் தொடக்கம் குறித்து அறிவது எளிதல்ல. அதை முழுமையாக எடுத்துரைக்கும் அன்றைய குழந்தைகளான இன்றைய முதியோரையும் காண்பதும் அரிதாகவே உள்ளது.