ஒரு நாவலை சினிமாவாக எடுப்பது என்பது, மகளுக்கு திருமணம் செய்து புகுந்த வீட்டுக்கு அனுப்புவது மாதிரி... சினிமா என்பது மாப்பிள்ளைக்கு சமம்... சாதாரணமாக யாரும் மாப்பிள்ளையைப் பற்றி இழிவாகப் பேசுவதில்லையே!’ _ தன் படைப்புகளைத் தழுவி சத்யஜித் ரே சினிமா எடுத்தபோது, வங்காள எழுத்தாளர் சங்கர் முகர்ஜி சொன்னது இது! இங்கே, வெளியுறவுத் துறை உயர் அதிகாரி விகாஸ் ஸ்வரூப் எழுதிய முதல் நாவல் க்யூ & ஏ, ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ என்ற தலைப்பில் (மாப்பிள்ளையான) திரைப்படமாகி, கோல்டன் குளோப், ஆஸ்கர் விருதுகளை அள்ளிய பிறகு, (மணப்பெண்) க்யூ & ஏ நாவலும் அதே தலைப்பில் இன்று புகழின் உச்சியைத் தொட்டுள்ளது! ஏற்கெனவே 36 மொழிகளில் இந்த நாவல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இப்போது உங்கள் கரங்களில் தவழுவது அதன் தமிழ் வடிவம்! மும்பை தாராவி பகுதி சாமானிய இளைஞன் ராம் முகமது தாமஸ், எப்படி டி.வி.க்விஸ் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, எல்லாக் கேள்விகளுக்கும் சரியான விடை சொல்லி நூறு கோடி ரூபாய் ஜெயிக்கிறான் என்பது இந்நாவலின் அடிநாதம். ஒவ்வொரு கேள்விக்கும் தாமஸ் சரியான விடை சொன்னதன் பின்னணியில் அமைந்த சம்பவங்களை ஃப்ளாஷ் பேக் யுத்தியில் மிக அருமையாக விவரித்திருக்கிறார் விகாஸ் ஸ்வரூப். கையில் எடுத்தால் ஒரே மூச்சில் படித்து முடிக்கத் தோன்றும் ஒரு சில நாவல்களில் விகாஸ் ஸ்வரூப் எழுதிய இந்த நாவலும் ஒன்று. தமிழாக்கத்திலும் அந்த விறுவிறுப்பு இருப்பதைப் படிக்கும்போது உணர முடியும்!