கலைஞர்
கருணாநிதி இங்கிலாந்து, ரோம், பாரிஸ், மேற்கு ஜெர்மனி முதலாய நாடுகளிற்
கண்டு களித்தவற்றை 'இனியவை இருபது' என்னும் பயனக் கட்டுரை தொடராக வந்தது.
பின்னர் அவர் விரிவாக எழுதி நூலாக வெளியிடப்பட்டது.
‘‘கலைஞர், புதினங்களைப் படைத்தார்;
நாடகங்களைப் படைத்தார்; கட்டுரைகளைப் படைத்தார் என்பது மட்டும் அவரது
பங்களிப்பு அன்று. அவர், புதிய தமிழை... புதிய தமிழ் நடையைத் தமிழ்
உலகுக்குப் படைத்துத் தந்தவர்’’ என்றார் டாக்டர் வா.செ.குழந்தைசாமி.
இங்கிலாந்து, ரோம், பாரிசு, மேற்கு
ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு ஒரு முறையும், அமெரிக்க நாட்டுக்கு ஒரு முறையும்
பயணம் மேற்கொண்டேன். இதில் நான் குறிப்பிட்டுள்ள நாடுகளுக்குச் செல்லும்
வாய்ப்பில்லாதவர்கள், இதனைப் படித்துவிட்டு அங்கெல்லாம் சென்று வந்த
உணர்வைப் பெற்றாலும், அல்லது எப்படியும் ஒரு முறை அந்த நாடுகளுக்குச் செல்ல
வேண்டும் என்ற துடிப்பினை வெளியிட்டாலும், அது இந்த நூலுக்குக் கிடைத்த
வெற்றியாகும்.
அன்பன்,
மு.கருணாநிதி
"சென்றிடுவீர் எட்டுத் திக்கும் -கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்"
கவிச் சக்கரவர்த்தி பாரதியார் வெறும் சொல்லழகிற்காக இந்தக் கவிதை
வரிகளைப் புனையவில்லை. பண்டைத்தமிழர், கடல் பல கடந்து பல்லாயிரக்கணக்கான
கற்கள் தொலைவிற்கு அப்பால் நாகரிகத் தொடர்பும், வாணிகத் தொடர்பும், அரசியல்
தொடர்பும் கொண்டிருந்தனர் என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் மிகப் பலவுண்டு.
அந்தத் தொடர்பிற்கான அடையாளங்கள்தாம் இன்றைக்கும் தமிழகத்தின்
கடற்கரையோரங்களில் கிடைக்கின்ற கிரேக்க, உரோமானிய நாணயங்களாகும்.
பிற நாடுகளுக்குச் செல்வது என்பது வெறும் இன்பப் பயணங்களுக்காக
அமைந்துவிடாமல், பொறுப்பிலே இருப்பவர்களுக்கு ஊக்கத்தையும், பணியாற்றுவதில்
உற்சாகத்தையும் எழுப்புகின்ற வகையில் அமைந்திட வேண்டும். அப்படி ஒரு
பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் நான் நீண்ட நாளாகக்
காத்திருந்தேன்.
ஆசிரியர் பற்றி: முத்துவேல்
கருணாநிதி (M. Karunanidhi) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர். தமிழக
முதல்வராக ஐந்துமுறை பதவிவகித்தவர். 1969ல் முதன்முறையாக தமிழக
முதல்வரானார். மே 13, 2006ல் ஐந்தாவது முறையாக தமிழக முதலமைச்சராகப்
பொறுப்பேற்றார். கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில்
ஈடுபாடு கொண்டவர். 'தூக்குமேடை' நாடகத்தின் போது எம். ஆர். ராதா, இவருக்கு
'கலைஞர்' என்ற பட்டம் அளித்தார். இன்றும் அப்பெயராலேயே இவரது ஆதரவாளர்களால்
அழைக்கப்படுகின்றார். இந்திய அரசியலில் தொடர்ந்து பங்கு வகித்த மிக
முக்கியமான மூத்த அரசியல் பிரமுகர்களுள் ஒருவர் ஆவார். இவர் 75
திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார். 15
நாவல்களையும் 20 நாடகங்களையும் 15 சிறுகதைகளையும் 210 கவிதைகளையும்
படைத்துள்ளார்.மேலும் "நண்பனுக்கு", "உடன்பிறப்பே" என்னும் தலைப்புகளில்
7000க்கும் மேற்பட்ட மடல்களை எழுதியிருக்கிறார். கரிகாலன் என்னும் பெயரில்
கேள்வி-பதில் எழுதியிருக்கிறார். இவை தவிர தாம் பணியாற்றிய இதழ்களில்
எண்ணற்ற தலையங்கங்களை எழுதியிருக்கிறார். இவரின் படைப்புகள் 178 நூல்களாக
வெளிவந்திருக்கின்றன.