தாஜ் மகால் பேலஸ் ஹோட்டல் தீப்பிழம்புகளுடன் கொழுந்து விட்டு
எரிந்துகொண்டிருக்கிறது. ஹோட்டலில் தங்கியிருந்த 1200 விருந்தினர்களைக்
காப்பாற்ற ஹோட்டல் ஊழியர்கள் மூன்றில் ஒரு பகுதியினர் தங்கள் இன்னுயிரை
இழந்துள்ளனர். அன்று சைபர் தீவிரவாதிகளிடமிருந்து உலகைக் காப்பாற்றிய சிவா
இன்று மருத்துவமனையில் கோமா நிலையில் உயிருக்குப் போராடிக்
கொண்டிருக்கிறார். அவரது நண்பர் மைக் ஹோட்டல் லாபியிலேயே உயிர்
நீத்தார். கோமா அல்லது ஆழ்நிலை மயக்க நிலையில் தோன்றும்
நினைவலைகளுக்குத் தெளிவான விளக்கம் அளிக்க முடியாது. ஒன்றுடன் ஒன்று
தொடர்போ தொடர்ச்சியோ இருக்காது. சிவாவுக்கும் அப்படித்தான். திடீரென
காலச் சக்கரம் பின்நோக்கி நகரத் தொடங்கியது. அருவிகள், நீர்நிலைகள்,
ஓடைகள், கண்கவர் இயற்கைக் காட்சிகள் என அனைத்துமே ரம்மியமாக இருந்தன.
பூக்களை ரசித்துக் கொண்டிருந்த கண்களுக்குத் திடீரென போர் வாள்களும்,
ஈட்டிகளும் தோன்றின. வண்டுகளின் ரீங்காரத்தையும், குயில்களின் கீதத்தையும்
கேட்டுக்கொண்டிருந்த செவிகளில், புழுதியைக் கிளப்பும் குதிரைகளின்
குளம்படிச் சத்தமும், விதவைகளின் ஒப்பாரியும், புலம்பலும் கேட்டன.
பிரம்மாண்ட கப்பலின் உயர்ந்த கொடி மரத்தின் மீதும், அடுத்த சில
நிமிடங்களில் கோட்டைக் கொத்தளத்தின் மீதும் நின்று கொண்டிருப்பது
போலவும் மாறி மாறிக் காட்சிகள் தோன்றின. திடீரென இந்த உடலைவிட்டு,
உலகத்தை விட்டு, பிறகு பிரபஞ்சத்தை விட்டே வேறு எங்கோ பறப்பது போன்று
சிவா உணர்ந்தார். அது பூர்வ ஜென்மங்களை நோக்கிய பயணம்!