மதுரை மீனாட்சி: உண்மை வரலாறு - டார்வின்
சிறுவயதில் நமக்கு ஒரு நீதிக் கதை சொல்லப்படும். அதில், ஒரு நரி கடினமான பசியில் உயரத்தில் இருக்கும் திராட்சைக் கொத்தைப் பறிக்க நினைக்கும். ஆனால், பல முறை முயற்சித்தும் பறிக்க முடியாமல்.. கடைசியில், "ச்சீச்சீ இந்த பழம் புளிக்கும்" என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு சென்று விடும்.அப்படிச் சென்ற நரிக்கு, திராட்சை என்ற நினைவே மறந்து போனபிறகு.. எதிர்பாராமல், ஒரு திராட்சைக் கொத்தே கிடைத்தால் எப்படி இருக்கும். அதுபோலத்தான், எனக்கு இந்த புத்தகத் தலைப்பு கிடைத்தது. ஒரு காலத்தில் கடவுள்களின் உண்மை வரலாற்றை (புராணங்களை தவிர்த்து), அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் அது சம்மந்தமான புத்தகங்களை, தேடித்தேடி வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன். என் தேடலுக்கு அதிகமாக விடை தந்தது தொ.பரமசிவம் அவர்களின் புத்தகங்கள் தான்.
பல கடவுள்களின் உண்மை வரலாற்றை அறிந்து கொண்ட எனக்கு, மதுரை மீனாட்சியின் உண்மைக்கதை மட்டும் நரிக்கு எட்டாத திராட்சைப் பழமாகவே இருந்தது. நானும் பலமுறை முயற்சி செய்து பார்த்துவிட்டு, அது கிடைக்காது என்று முடிவுகட்டி, என் எண்ணங்களை வேறு விதமான புத்தகங்கள் நோக்கி திருப்பிவிட்டேன். அந்த நேரத்தில் எதேச்சையாக இந்த புத்தகம் என் கண்ணில் பட, வேதாளம் மீண்டும் முருங்கைமரம் ஏறி விட்டது.. உடனே வாங்கிவிட்டேன்.