என் காதல் தேவதை::::::
*******
பக்கத்தில் இருக்கும் போது அருமை தெரியாமல் விலகும் போது மொத்த மதிப்பையும் உணரவைக்கும் சக்தி காதலுக்கு மட்டுமே உண்டு. பள்ளியில் தோழிகளாக இருந்த ஸ்வேதா , எழிலுக்கு ஏற்பட்ட சின்னப் பிரச்சனை இருவருக்குள் போட்டிகளாக மாறி எப்பொழும் சண்டை போட்டு கொள்பவர்களாக மாற்றி விட்டது.
படிப்பில் கில்லாடிகளான இருவரும் ஒரே கல்லூரியில் சேர்கின்றனர். முதலில் ராக்கிங்கில் மாட்டினாலும் அவர்கள் சீனியருடன் பிறகு நட்பு ஏற்படுகிறது. அந்தக் குரூப்பில் இருக்கும் ப்ருத்வியை இருவரும் காதலிக்கின்றனர். அவனுக்கு இருவரையுமே பிடிக்கும் அதைத் தாண்டி அவனின் தோழி மானசாவின் சொல் பேச்சை கேட்டு நடப்பவன்.
புற அழகில் சற்றே குறைந்தவளான மானசா தனக்கு ப்ருத்வி மேல் வந்த காதலை மறைத்து விட்டு அவனுக்குச் சரியான கைய்ட்டாக வழிகாட்டுகிறாள். படிப்பிற்காக அனைத்தையும் ஒதுக்கியவனுக்குப் பிறகு தான் தன் மனதில் யார் இருக்காள் என்று தெரிகிறது. கடைசி நாள் அன்று மானசாவிடம் தன் காதலை சொல்லலாம் என்று வருபவனுக்கு அவள் மேல்படிப்புக்கு அமெரிக்கா செல்வதை அறிந்து தன் மனதை திறக்கிறான். நட்பு காதலாக முற்றுபெற்றது.
உறவுகள் விடுகதை::::
********
ஏமாறுபவர்களைத் தான் பாசம், அன்பு என்று பலவகைகளாகச் சொல்லி குருட்டுபுத்தியில் நம்பவைப்பவர் ஆனால் பல காலம் ஒருவரை ஏமாற்ற முடியுமா ??? எதாவது ஒரு நேரத்தில் உண்மை முகம் வெளிவந்தே தீரும்.
அண்ணன்கள் மேல் இருக்கும் பாசத்தில் வெளிநாட்டில் கஷ்டபட்டு சம்பாதிக்கும் பணத்தைக் கேள்வியே கேட்காமல் அவர்கள் கேட்கும் போது எல்லாம் வாரி கொடுக்கும் உத்தம தம்பி கிருஷ்ணா. தன் தோழன் இறந்ததைப் பார்த்து சொந்த நாட்டிலே எதாவது தொழில் தொடங்கலாம் என்று வருபவனிடம் பணத்திற்காகப் போட்டி போட்டு இரண்டு அண்ணன் குடும்பங்களும் பாசம் காட்டுவது போல நடிக்கிறது. அவன் திரும்பி போக மாட்டான் என்று தெரிந்த பிறகு அடக்கி வாசிப்பவர்களைக் கூடக் கண்டுகொள்ள முடியாமல் பாசத்திலே இருக்கும் கிருஷ்ணாவை காதலிப்பவள் பண்ணையார் மகள் ஹேமா. கிருஷ்ணாவின் நண்பன் சேகர் அவன் அண்ணன்களைப் பற்றிச் சொல்வதை எதையும் கேட்காமல் தன்னிடம் இருந்த கையிருப்புப் பணத்தை அவர்களுக்குத் தொழில் விஸ்தரிப்புக்கு கொடுத்துவிட்டு திண்டாடுபவனுக்கு ஹேமா உதவுகிறாள்.
அனைத்து நாடகங்களும் ஒரு நாள் முடிவுக்கு வர வேண்டும் என்ற கட்டாயத்திற்கு விதிவிலக்காக இல்லாமல் கிருஷ்ணாவும் அண்ணன்களின் சுயரூபம் தெரிந்து கொண்டு அவர்களைக் காலில் விழவைத்து தன் சபதத்தை நிறைவேற்றுபவன் இனி ஒரு போதும் அவர்களை நம்பத் தயாராக இல்லை. ஹேமாவுடன் இனிதே இல்லறம் பாசமான இரு குழந்தைகளுடன் மற்றும் உண்மை தோழன் சேகருடன் வாழ்க்கை அதன் போக்கில் நகர்கிறது.