முதல் அத்தியாயம் முழுக்க சில அடிப்படை உண்மைகளை ஆதாரமாகக் கொண்டு செய்யப்பட்ட அனுமானம். வேறு சில அடிப்படை உண்மைகளைக் கொண்டு அனுமானம் செய்தால் இந்த அனுமானம் தவறாகத் தோன்றலாம். இரண்டாம் அத்தியாயம் முழுக்க நேரடி அனுபவமும், அதன் அடிப்படையில் உண்டான அனுமானமும். இந்த நேரடி அனுபவத்தை வேறு சில ஞானியாரின் பாடல்கள் நிரூபணம் செய்வதைக் காணலாம். மூன்றாம் அத்தியாயத்தில் பல் வேறு முக்திக்கான மார்க்கங்களின் சாரமும் அவைகளின் இடையேயான ஒற்றுமையும் வேற்றுமையும் மற்றும் வேற்றுமை போல் தோன்றும் தோற்றத்திற்கான காரணங்களையும் அறியலாம். அதைப் போல நான்காம் அத்தியாயத்தில் முக்தியென்று எவையெல்லாம் கூறப்பட்டுள்ளன என்றும் அவை எதைக் குறிக்கின்றன என்றும் காணலாம். ஐந்தாம் அத்தியாயத்தில் பிரம்மத்தைப் பற்றிய சில அடிப்படை உண்மைகளைக் கொண்ட நமது அனுமானம். சிற்பியைப் பற்றி சிந்திக்காமல் சிலையை மட்டுமே நாம் பார்ப்பதைப் போல் இங்கே விஷயம் மட்டும் – படிப்பவர் படிப்பதற்காக.