வால்ட்டர் பென்டிக்ஸ் ஷோன்ஃப்ளைஸ் பெஞ்சமின் 1892 ஆம் ஆண்டு ஜூலை 15-ஆம்
தேதி பெர்லினில் செல்வவளமிக்க யூதக் குடும்பத்தில் பிறந்தார். பெர்லினில்
பள்ளிப் படிப்பை முடித்த அவர் ஃப்ரீபர்க் பலகலைக்கழகத்தில் சேர்ந்தார்.
1917-இல் டோரா சோஃபி கெல்னரை மணந்தார். 1919-இல் இலக்கியத்தில் டாக்டர்
பட்டம் பெற்றார். ஓர் இலக்கியப் பத்திரிக்கையாளராக இடர்பாடுகள் நிறைந்த
வாழ்க்கையை மேற்கொண்ட அவர் 1925-26 இல் மாஸ்கோவில் பத்திரிக்கை நிருபராகப்
பணி புரிந்தார். எர்னஸ்ட் ப்ளாக், ஜார்ஜ் லூகாக்ஸ் ஆகியோரின் பாதிப்பால்
பெஞ்சமின் மார்க்சீயத்தை ஆழமாகப் பயின்றார். 1920-களின் இறுதியில் அவர்
பெர்ட்டோல்ட் பிரெக்டின் நட்பைப் பெற்றார். நாஜிகள் வெற்றி பெற்றதைத்
தொடர்ந்து 1933-ஆம் ஆண்டு ஜெர்மனியிலிருந்து வெளியேறி, பாரிஸுக்குச்
சென்றார். இரண்டாம் உலகப் போர் தொடங்கியபோது பெஞ்சமின் பாரிஸிலிருந்து
தப்பித்து ஸ்பெயின் நாட்டிற்குள் நுழைய முயன்றார். ஸ்பெயின் நாட்டு
எல்லைப்புற சிறுநகரான போர்ட்போவை அடைந்தார். பிரான்ஸிலிருந்து வரும்
அகதிகளின் விசாக்கள் செல்லாது என்று ஸ்பெயின் அரசு உத்தரவு
பிறப்பித்திருந்ததை அறிந்து, அன்று இரவு (1940-ஆம் ஆண்டு செப்டம்பர் 26-ஆம்
தேதி) பெஞ்சமின் தற்கொலை செய்து கொண்டார்.