ஈழத்து
முற்போக்கு இலக்கியமும் முற்போக்குக் கட்சிகளும், அனைத்து உழைப்பாளி
வர்க்கமும் ஒருங்கிணைந்து முன்னெடுக்கும் ஒரு புரட்சியைப் பற்றிய பிரமையைக்
கொண்டிருந்தன. சீனச் சார்பு இலங்கை இடதுசாரிக் கட்சியின் உறுப்பினராக,
தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கப் போராளியாகக் களச் செயல்பாடுகளில் பங்கு
கொண்ட நந்தினி சேவியர் அவர்களின் படைப்புலகம் இந்த மயக்கத்தைக் கொள்ளாத
ஒன்று. தலித் மக்களின் அன்றாட ஜீவிதத்துள் எதிர்பாராமல் துளிர்க்கின்ற
துன்பியலையும், நம்பிக்கைகளையும், வாழ்வனுபவத்தின் இயங்கியலுடன் பதிவு
செய்கின்றன நந்தினி சேவியரின் படைப்புக்கள். இடதுசாரிப் போராட்டங்களின்
ஊடாகவும், தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கப் போராட்டங்களின் ஊடாகவும், தலித்
மக்களின் ஆழ் மனங்களுக்குள் உருவாகும் வீறு கொண்ட மனவெழுச்சியை, அவர்களின்
துன்பியல் வாழ்வை, புறவயமாக, அதற்கே உரிய கால நீட்சியுடன் கண்டடையும்
முயற்சியாக நந்தினி சேவியரின் படைப்புலகம் அமைகிறது.