நகைச்சுவை என்பது அருமையான கலை. பலருக்கும் பல உண்மைகளைப் புரியவைக்க உதவும் மாபெரும் யுக்தி.
அசட்டுத்தனத்திற்கும் , நகைச்சுவைக்கும் இடையே பெரிய இடைவெளி உள்ளது. ஆன்மிகமான பேருண்மைகளை, உலகம் முழுவதும், முல்லா, பீர்பால், தெனாலிராமன் மற்றும் ஜென் துறவிகள் பற்றிய கதைகள் மூலம் விளக்குகிறார்கள். நகைச்சுவை மூலம் பேருண்மைகளை வூளக்கும் தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர் திருவாரூர் இரெ. சண்முகவடிவேலு அவர்கள். அவர் பேச்சை மணிக்கணக்காகச் சலிப்பின்றி கேட்கலாம். நமது சின்னச் சின்னத் தவறுகளை சுட்டிக்காட்டுகிறார். திருத்துகிறார்.நமது பிழைகளைக் கண்டு நாமே பயந்து குற்ற உணர்வுடன் வாழ மட்டுமே மதகுருமார்கள் பழக்குகிறார்கள். ஆனால், நேர்மாறக நமது தவறுகளைக் கண்டு நாமே நகையாடி, மீண்டு வெளியில்வர, ஒரு நண்பராக திரு. சண்முகவடிவேலு அவர்கள் துணைநின்று கைதூக்கி விடுகிறார். பழக்க வழக்கங்கள் மெல்ல நம்மை அடிமைப் படுத்துவதைப் போலீஸ்காரர் கதையால் புரிய வைக்கிறார். வேண்டாத விஷயங்களை விலை குறைவு என்று வாங்கி விட்டு அவஸ்தைப்படும் முட்டாள்தனத்தைத் தர்பூசணி பழம் வாங்கிய நண்பர் மூலம் நெற்றியில் எழுதுகிறார். அறிவுரை, அல்லது அறவுரை என்று நீட்டி முழக்கி போர் அடிக்காமல் நெருங்கி வந்து தோள் தொட்டுப் பேசும் நட்புதான் இந்நூலின் ஆதார ஸ்ருதி.
சுசி.சிவம்.