தெய்வத்தை கோயிலுக்குத் தேடிச் சென்று வணங்குவது வழிபாடு; அந்த தெய்வத்தையே நம் வீட்டுக்குள் வரவழைப்பது விரதம். பரிகாரத் தலங்களை தேடித் தேடிச் சென்று நம் குறைகளை தெய்வத்திடம் சொல்கிறோம்; வீட்டில் முறையாகச் செய்யும் ஒரு விரதத்தால், அந்த தெய்வமே நம்மை நெருங்கிவந்து குறைகளைத் தீர்த்து வைக்கிறது. அதாவது, நல்ல திதியில் நாம் மேற்கொள்ளும் செயல் செல்வத்தை அள்ளித் தரும்; நல்ல வாரத்தில் செய்யும் முயற்சியால் ஆயுள் பலமாகும்; நல்ல நட்சத்திரத்தில் நடத்தும் பணி பாவ விமோசனத்தை அருளும்; நல்ல யோகத்தில் செய்யும் செயல் நோய் தீர்க்கும்; நல்ல கரணத்தில் எதைச் செய்தாலும், அது சிறப்பாக முடியும். இதுதான் பஞ்சாங்கம் காட்டும் வழி.நல்ல காலத்தில் நாம் மேற்கொள்ளும் செயலே இவ்வளவு பலன்களைத் தருகிறது என்றால், அதே நல்ல காலத்தில் நாம் அனுஷ்டிக்கும் விரதங்கள், அளவிட முடியாத வளங்களைத் தரும் என்பதில் சந்தேகமில்லை. நம் முன்னோர்கள், மகான்கள், ஞானிகள் வகுத்துத் தந்த விரத முறைகளை எளிமையான வகையில் இந்த புத்தகத்தில் நீங்கள் காணலாம். ஒவ்வொரு விரதத்தையும் எப்போது, எப்படிச் செய்ய வேண்டும், அதனால் கிடைக்கும் பலன்கள் என்ன என எல்லா விஷயங்களையும் முழுமையாகத் தரும் புத்தகம் இது. விரதங்கள் தரும் வளத்தை நீங்கள் அனுபவபூர்வமாகவே உணர முடியும்.