பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி தொடங்கி, நமது ஆக்கங்கள் அனைத்தும் சுவடிகளிலிருந்து அச்சுக்கு மாறத் தொடங்கின. இம் மாற்றம் உருப்பெற்றதற்கான துல்லியமான வரலாறுகள் இன்னும் எழுதப் பெற வில்லை. இனிமேல்தான் அவ்வரலாறு எழுதப்பட வேண்டும். அதற்கான தேவையும் அண்மைக்காலங்களில்தான் உருப்பெற்று வருகிறது.
சங்க இலக்கியப் பிரதிகள் ஆறுமுக நாவலர் தொடக்கம் இரா.இராகவையங்கார் முடிய 1851-1918 என்ற காலப்பகுதியில் அச்சு வாகனம் ஏறின. 1887இல் சி.வை.தா. தான் பிள்ளையார் சுழிப்போட்டார். அது உ.வே.சா.வின் அயராத உழைப்பால் முழுமைப் பெற்றது. உரைக்காரர்களால் பாட்டு, தொகை என்று அழைக்கப்பட்ட பிரதிகள், பேரா.ச.வையாபுரிப் பிள்ளை அவர்களால் ‘சங்க இலக்கியம்’ என்று பெயர் சூட்டப்பட்டது. தமிழ்விடு தூது ‘மூத்தோர் பாடியருள்’ ‘பத்துப்பாட்டும் எட்டுத்தொகை’யும் என்றே பேசுகிறது.