அலைகளின் ஆலோலப் பாட்டு, மீனவர்களின் ஐலாசாப் பாட்டு, பெயர் தெரியாப் பறவைகளின் சங்கீதச் சாரல் என இசை லயங்களுக்கு மத்தியில், இயற்கை அன்னையின் அரவணைப்பில் தன்னை மிதந்துகொண்டிருக்கிறது அந்த சின்னத்தீவு. அதன் பெயர் ராமேஸ்வரம். இது, தமிழகத்தின் தென்கோடி மாவட்டமான ராமநாதபுரத்தின் அருகே இருக்கும் அழகிய தீவு. குட்டிக் குட்டி தீவுக் கூட்டங்களால் அரண்செய்யப்பட்டிருக்கும் மிக அழகிய தீவு. சென்னையிருந்து 600 கி.மீ. தொலைவிலும், மதுரை விமான நிலையத்தில் இருந்து 172 கி.மீ. தொலைவிலும் இத்தீவுத் திருநகர் கம்பீரமாக அமர்ந்திருக்கிறது. இந்துக்களுக்கு இது காசிக்கு நிகரான புனித சேத்திரம். இங்கிருக்கும் தொன்மை மிகுந்த ராமநாத சுவாமி திருக்கோயில், புராண முக்கியத்துவம் பெற்றதாகும். பழமை வாய்ந்த மசூதியும் சர்ச்சும் ஊரின் பெருமையை உயர்த்திக்கொண்டிருக்கிறது. இந்தக் கடல் நகரின் புனிதத்தை, மேலும் புனிதப்படுத்தியது. கலாமின் ஜனனம்.