இத்தொகுப்பின் கவிதைகளில் இயற்கையை ஞாபக மறதிக்குரிய பிரசன்னமாகவும்,
மனிதர்களையும் அவர்களின் கருத்தியலையும் புனைவாகவும் மாற்றாகவும் வைக்கவே
முயன்றிருக்கிறார். யதார்த்தம் இயற்கையை, பொருளை அதன் பயன்மதிப்பில்
கணக்கிடும்போது, கலை அதை வேறொன்றாக ஏற்கனவே நடந்ததில் வேறாக, புதிய ஒன்று
அங்கு நடப்பதாக பொதுமனதை குலைக்கும் விதத்தில் அல்லது அதன் தன்னிலையைச்
சுட்டி எப்போதும் துவங்கச் சாத்தியமாக இருக்கும் சூன்ய இருப்பை
நினைவூட்டும் விதத்தில் வெளிப்படுத்துகிறது. இது ஒரு ஏமாற்று
விளையாட்டுத்தான். எனினும், இதற்குள் மனிதச் சம்பவங்களின் கணக்கீடுகள்,
சாபங்கள், ஏவல்கள், அழித்தொழிப்புகள், நிகழ்தகவுகள், மெய்மைகள், அறங்கள்
மற்றும் விடுதலைகளும் மற்றமைகளும் ஒளிந்திருக்கின்றன.