பவா செல்லத்துரை என்றொரு கதைசொல்லி ஆவணப்படத்தைப் பார்த்தேன் ,பவாவோடு இருபது ஆண்டுகளுக்கும் மேல் நெருங்கிப் பழகியவன் என்ற முறையில் படம் பார்க்கும் போது, அவர் கூடவே இருந்து கதை கேட்பது போல இயல்பாக, நேர்த்தியாக, உணர்ச்சிபூர்வமாக இப்படம் உருவாக்கபட்டுள்ளது,சிறந்த கவிஞர், சிறுகதை ஆசிரியர், பேச்சாளர், கதை சொல்லி, இலக்கிய இரவுகளை உருவாக்கியவர், முற்றம், டயலாக் போன்ற இலக்கிய அமைப்புகளை உருவாக்கி நடத்திவருபவர், பதிப்பாளர் எனப் பன்முகங்கள் கொண்டவர் பவா செல்லத்துரை.
இந்த ஆவணப்படம் பவாவின் கதை சொல்லும் திறனை முதன்மைபடுத்தியிருக்கிறது, இதனைச் சிறப்பாக இயக்கியுள்ள ஆர்.ஆர். சீனிவாசன் மிகுந்த பாராட்டிற்குரியவர், இயற்கையோடு இணைந்த காட்சிபடுத்துதலில் படம் கவித்துமாக உருவாக்கப்பட்டுள்ளது.பவா எப்போதுமே தான் படித்த சிறந்த சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள் எதையும் மனம் திறந்து பாராட்டி கொண்டாடக்கூடியவர், சுந்தர ராமசாமியின் எலிசபெத் டீச்சர் கதையை அவர் மேடையில் சொல்வதைக் கேட்டு நெகிழ்ந்து போயிருக்கிறேன்,உணர்ச்சிபூர்வமான ஈடுபாடும், தகுந்த குரலும், பார்வையாளரை வசியப்படுத்தும் சொல்லும முறையும் கதை சொல்வதற்குத் தேவை, இந்த மூன்றும் பவாவிடம் சிறப்பாக ஒன்றுகூடியிருக்கிறது,