தற்காலத்திய மேலைக் கடற்கரையை (அரபிக்கடல்) ஒட்டி
அமைந்துள்ள கேரள மாநிலமும், சேலம், கோவை மாவட்டங்கள்
அடங்கிய கொங்கு நாடும் சேரப் பேரரசர்களின் ஆட்சிக்கு
உட்பட்டுத் திகழ்ந்த பகுதிகளாகும். அந்நாட்டு ஆறுகளுள்
குறிப்பிடத்தக்க ஆறு பெரியாறு என்பதாகும்.
பெரியாறு கடலோடு கலந்த இடத்தில் வஞ்சி மாநகரம்
இருந்தது. தற்காலத்திய கருவூரும் சேரர்களின் வஞ்சி என்றே
அழைக்கப் பெற்றது. கருவூரே பண்டைய சேரர்களின் தலைநகரம்
என்பதை அண்மைக் கால ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.
நறவு, தொண்டி, முசிறி, வைக்கரை என்பன சேரநாட்டுத்
துறைமுகப் பட்டினங்களாக விளங்கின.