நேர்மை, நற்குணம், பராக்கிரமம், தர்மம், நன்றியுணர்வு, அன்பு, சகோதரபாசம்,
தியாகம், வீரம், தொண்டுள்ளம், வாக்கு தவறாமை என்ற அனைத்து நற்குணங்களையும்
கொண்டு விளங்கிய ராமனின் வாழ்க்கை வரலாறு படிப்பவர்க்கும் அத்தகைய
நற்குணங்களைத் தரும் என்பதில் சந்தேகமில்லை .
ராமன் அயோத்தியின் மன்னனாகப் பட்டமேற்றபின் பதினோராயிரம்
ஆண்டுகள் ஆட்சி செய்தான் என்றும் அவனது ஆட்சியில் கொலை, கொள்ளை, சூது,
வஞ்சம், வறுமை, நோய் எதுவுமின்றி மக்கள் நலமுடன் வாழ்ந்தனர் என்றும்
புராணம் கூறுகிறது. அதுவே 'ராம ராஜ்யம்' என்று அழைக்கப்படுகிறது.
உலகின் கடைசி இரண்டு இந்தியர்கள் இருக்கும்வரை அவர்கள்
ராமாயணத்தைப் பற்றியும் மகாபாரதத்தைப் பற்றியும் பேசிக் கொண்டு
இருப்பார்கள் என்று சுவாமி விவேகானந்தர் கூறினார். அத்தகைய பெருமைக்கும்
சிறப்புக்கும் உரிய ராமாயணத்தைப் படித்து அதுகூறும் நற்கருத்துக்களை
வாழ்வில் கடைபிடித்து வாழ்வோமாக!