பிரபல விமர்சகரும் எழுத்தாளருமான திரு. தம்பு சிவா என்று அழைக்கப்படும் த. சிவா சுப்பிரமணியம் அவர்கள் வெளியிட்டிருக்கும் புத்தகமே முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் என்ற இந்தத்தொகுதி. இதில் இலங்கை இந்திய முற்போக்கு எழுத்தாளர்களின் விபரங்கள் விலாவாரியாக தரப்பட்டிருக்கின்றமை கூடுதல் சிறப்பம்சமாகும். இந்தியாவின் நியூசெஞ்சுரி புத்தக வெளியீட்டகத்தினரால் வெளியிடப்பட்டிருக்கும் இத்தொகுதி 86 பக்கங்களைக் கொண்டு அமைந்திருக்கிறது. இன்றைய இளைய சமுதாயத்தினர் மூத்த இலக்கியவாதிகளைப் பற்றி அறிந்து வைத்திருப்பதில்லை. அவ்வாறு அறிந்துகொள்வதற்கான சாத்தியப்பாடுகளும் அவ்வளவாக இல்லை. அத்தகைய பெரும் குறையை நீக்குவதற்காகவும், முற்போக்குவாதிகளை அறிந்துகொள்வதற்காகவும் முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் என்ற இந்தத்தொகுதியில் இலங்கை, இந்திய முற்போக்கு எழுத்தாளர்களைப் பற்றிய குறிப்புக்கள் இரண்டு பாகங்களாகப் பிரித்து இடம்பெற்றிருக்கின்றன.