விக்னேஷை எனக்கு ஒரு வருடமாய்த்தான் தெரியும். என்னோடு என் TaalkShop நிறுவனத்தில் பணிபுரிகின்றவர். எதிர்ப்படுகிற சந்திப்பில் பார்வையைக்கூட தவிர்த்துக்கொண்டு அவருக்கென்று ஒரு உலகத்தில் சஞ்சரிக்கிற மனிதர். புத்தகங்கள் அடுக்கப்பட்ட என் அலுவலகத்தின் அலமாரி நூலகத்திற்கு அருகே அவர் நிற்பதை அடிக்கடி கவனித்ததுண்டு. ஒருநாள் மதிய உணவுக்காக பசியோடு புறப்பட்டபோது, ஆனந்தவிகடன் ஒன்றைக் கையில் வைத்துக்கொண்டு தயங்கித்தயங்கி என் அருகில் வந்தார். “என் கவிதை விகடனில் வந்துருக்கு சார்” என்று காட்டினார். இத்தனை நாட்களில் அவர் என்னோடு பேசியது அது நாலாவது முறையாக இருக்கும். கவிதையின் தலைப்பு “பொரணிப்பேச்சு”. வாயே பேசாத ஒருவனின் பொரணிப்பேச்சில் நான் வாயடைத்துப்போனேன். “நீ கவிதையெல்லாம் எழுதுவியா?” என்று கேட்டபோது, கணினியைத் திறந்து தன் படைப்புகளைக் காட்டினார். அதைப் படிக்கிறபோது எனக்கு ஏற்பட்ட உணர்வுகள், இந்தப் புத்தகத்தை வாசிக்கிற ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் என நம்புகிறேன். சிக்ஸ்த் சென்ஸ் கார்த்திகேயனை அழைத்து, இவரின் கவிதைகள் அற்புதமாய் இருக்கிறது கொஞ்சம் பாருங்கள் என்றேன். அவரின் முயற்சியால் விக்னேஷ் என்ற இந்தப் படைப்பாளி உங்கள் பார்வைக்கு வந்திருக்கிறார். இந்தப் புத்தகத்தை ஒரு சிறு பயணத்திலோ, மொட்டைமாடி நிலா முற்றத்தில் யாருடைய தொலைபேசி அழைப்புக்காகவோ காத்திருக்கும் இடைவெளிக்குள்ளோ, நீங்கள் வாசித்துவிட முடியும். ஆனால் இந்தக் கவிதைகள் ஏற்படுத்தும் தாக்கம் நீண்ட காலத்திற்கு உங்கள் நெஞ்சில் நிலைத்திருக்கும். பவுன்ராஜ் ஆசாரி, அந்த ரோட்டோரத்துப்புளிய மரம், கண்ணன், செல்வி, மொட்டைமாடியின் ஈரத்தரைகள், அப்புறம் கொஞ்சம் காதல்…. எல்லோரும் விக்னேஷைப் போலவே உங்களுக்கும் நெருக்கமாவார்கள். கிராமத்திலிருந்து புறப்பட்டு வந்த ஒரு அமைதியான கவிஞன் தன் மனதில் தேங்கிக்கிடக்கும் வாழ்வியலின் அழகையும் அனுபவத்தையும் மனசு நிறைய சுமந்துகொண்டு 13A பஸ் தான் போகவேண்டிய இடத்துக்கு நிச்சயம் போகுமா என்ற சந்தேகத்தோடும், கவலையோடும் ஜன்னல் வழியே எட்டிப் பார்த்துக்கொண்டே போகிற ஒரு சுவாரஸ்யமான பயணம்தான் இந்த ‘நகராதி’ வாழ்த்துகள் விக்னேஷ்! அன்புடன், கோபிநாத்.