ஓவியர் ரஃபீக்கின் ‘‘சித்திரக்காரனின் குறிப்பிலிருந்து’’ எனும் இப்பிரதியை வாசிக்கக் கிடைத்த அனுபவம் சுவாரஸ்யமானது. இந்நூல் ரஃபீக் பிறந்து வளர்ந்த மதுரை மீனாட்சியம்மன் கோவில் பகுதி உருது முஸ்லிம்களின் வாழ்வியல் குறித்தும், இஸ்லாமியத் தொன்மங்கள் குறித்தும், நுண்கலை ஆர்வம் மிக்க இளைஞனொருவனின் மன இயல்புடன் பேச விழைகிறது. சுமார் 216 பக்கங்களில் விரியும் இப்பிரதியை நாவல் வகைமைக்குள் வைத்துப் பார்ப்பதில் நாவலாசிரியர்கள் பலருக்கும் தயக்கங்கள் இருக்கக்கூடும்.
இந்நூலை autofiction எனப்படும் சுயபுனைவு வகைமையில் சேர்க்கலாம். சமீபத்தில் வெளிவந்த சாரு நிவேதிதாவின் ‘எக்ஸைல்’ சுகுமாரனின் ‘வெல்லிங்டன்’ ரமேஷ் பிரதனின் ‘அவன் பெயர் சொல்’ போன்ற பிரதிகளை இதற்கு உதாரணமாகக் கூறமுடியும். ‘சித்திரக்காரனின் குறிப்பிலிருந்து’ என்னும் தலைப்பே கூட அத்தன்மையுடையதாகவே இருக்கிறது. பல பக்கங்களிலும் இடம் பெற்றுள்ள ரபீக்கின் ஓவியங்கள் இப்பிரதிக்கு கூடுதல் ஈர்ப்பை அளிப்பதாக உள்ளன.
தமிழில் இஸ்லாமிய இலக்கியங்கள் பெரும்பாலும் தமிழ் முஸ்லிம்களின் ஆக்கங்களே எனக்கருத வாய்ப்புண்டு. இவற்றுடன் ஒப்பிடும்போது உருது முஸ்லிம்களின் தமிழிலக்கியப் பங்களிப்பு சொற்பமே. உருது மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட கவிக்கோ அப்துல் ரகுமான் தமிழிலக்கியத்திற்கு செலுத்தியுள்ள பங்களிப்பு முக்கியமானது. ஆனால் நான் இவ்விடத்தில் கூறவிழைவது இன வரைவியலையே. இன்னும் குறிப்பாக உருதுமுஸ்லிம் வாழ்வியல் பதிவுகள் எதுவுமில்லாமல்தான் காலம் உருண்டோடிக் கொண்டிருந்தது. 2009ஆம் ஆண்டு எஸ்.அர்ஷியா தனது ‘ஏழரைப்பங்காளி வகையறா’ என்னும் நாவலின் மூலமாக இந்த மௌனத்தைக் கலைத்தார். அந்நாவலும் கூட மதுரை இஸ்மாயில்புரம் பகுதியில் வாழ்கின்ற உருது முஸ்லிம் தாயாதிகளின்-தலைமுறைக் கதையைப் பேசியது. இப்போது ஐந்தாண்டுக் கால இடைவெளியில் ரஃபீக்கின் Ôசித்திரக்காரனின் குறிப்பிலிருந்து’ வெளிவந்துள்ளது. அர்ஷியா, ரபீக் போன்றோரைத் தொடர்ந்து இனவரைவியல் தரும் உருது முஸ்லிம் எழுத்தாளர் குழுமம் ஒன்று இங்கு உருவாக வேண்டுமென நான் விரும்புகிறேன்.