"ஹரி! என்னடா அதிசயம் இது? எட்டு மணிக்கு முன்னாடி எழுந்துக்கமாட்டேன்னு நினைச்சு போன் செய்தால்... காலையில் ஏழு மணிக்கெல்லாம் இவ்வளவு தெளிவா பேசறே?" என்று மறுமுனையில் கரிசனம் கலந்த கேலியோடு கேட்டது அவனது தாய் சௌந்தர வல்லி. "நீங்க காரணம் தெரிஞ்சால் கிண்டல் பண்ணுவீங்க. அதனாலே சொல்லமாட்டேன்" சின்னப்பிள்ளை போன்றொரு பிடிவாதத்தில் வாதம் செய்தான். மகனைப் பற்றிப் புரிந்து வைத்திருந்த தாயாரோ குரலில் அலட்சியத்தைக் காட்டி, "சரி... ரொம்ப நல்லது. நீ சொல்ல வேண்டாம்!" என்றுவிட்டு, “ஆனால் நான் ஒரு முக்கியமான விஷயத்துக்காகத்தான் போன் செய்தேன்" என பீடிகைப் போட்டார். “அட என்னம்மா நீங்க? இந்த இடத்தில் 'நான் சொல்லமாட்டேன்'னு சொன்னால், நீங்க உடனே ‘சொல்லுப்பா ஹரி! என் கண்ணா இல்ல? என் ராஜா இல்ல? என் கிருஷ்ணா இல்ல?' அப்படின்னு அழுத்திக் கேட்கணும்...” "டேய்! எல்லாம் உனக்கு, உன் தாத்தா பக்கத்தில் இல்லாததால் கொஞ்சம் துளிர் விட்டுப் போச்சு. அவரையே உன்கிட்ட பேசச் சொல்லியிருக்கணும். தப்புப் பண்ணிட் டேன்" என்று கேலியாய் மிரட்டினார்.