தன் வரலாறுகள் என்பன பொதுவாகவே பிறப்பு, பெற்றோர், ஊர் அண்ணன் தம்பிகள், சுற்றம், ஊர்ப் பெருமை, படித்த பள்ளி, பணியாற்றிய இடங்கள் என அமைவது ஒரு வகை. தன் வாழ்க்கையில் எதிர் கொண்ட சவால்கள், துன்பம், அவற்றினூடான வலிகள் தன்னைச் சார்ந்த சமூகத்தின் கண்ணோட்டம் என்பதாக எடுத்துக் காட்டுவது இன்னொரு வகை. பெண்கள் தன் வரலாறு எழுதுவதை இன்றைய கால கட்டத்தில் அனைவரும் ஏற்றுக் கொள்வதாக இருப்பது ஆரோக்கியமான சிந்தனையே. கன்னடக் கவிஞரும் தலித் பெண்மணியுமான து. சரஸ்வதி தனக்கு நேர்ந்த அனுபவங்களை இந்நூலில் படம் பிடித்துள்ளார். கன்னட இலக்கிய உலகம் ஒரு தலித் பெண்ணின் தன் வரலாற்றைத் தன்னகத்தே கொண்டு இறுமாப்பு அடைகிறது.