சங்ககால இலக்கியங்களான பத்துப் பாட்டும், எட்டுத்தொகை நூல்களும் பதினெண்
மேற்கணக்கு நூல்கள் என்றும்;சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய நாலடியார்
முதல் கைந்நிலை வரை உள்ள பதினெட்டு நூல்களும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
என்றும் கூறப்படும். இவ்விரு தொகை நூல்களில் அகம், புறம் சார்ந்த
நூல்களும் உள்ளன. அவற்றுள் அகப்பாக்கள் மட்டும் இந்நூலில் ஆராயப்பட்டுள்ளன.
இயற்கையோடு இயைந்து வாழ்ந்த சங்ககால மக்களின் வாழ்வியலை இலக்கண, இலக்கியச்
சான்றுகளுடன் இந்நூல் எடுத்துரைக்கிறது.
சங்கம், சங்கம் மருவிய கால அகப்பாடல்களில் உள்ள திணை, துறை, கூற்று வைப்பு
முறை, முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள், பா வகைகள்,சமுதாய நிலை,
மதிப்பீட்டு அடிப்படையிலான ஒப்பீடுகள் ஆகியவை தனித்தனியாகக்
கூறப்பட்டுள்ளன. சங்கம், சங்கம் மருவிய காலம் என இருவேறு காலகட்டங்களையும்
ஒப்புநோக்கி இந்நூலாசிரியரே கேள்வியையும் எழுப்பி, அதற்கான விடையையும்
தந்திருக்கிறார்.