இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒரு முறை வேலை மாறுவதும், ஊர் அல்லது மாநிலம் அல்லது நாடு மாறுவதும், நான் சார்ந்திருக்கும் கணினித் துறையில் சகஜமான விஷயம்தான் என்றாலும், என்னைப் பொறுத்தவரை, இந்தப் புதிய வேலைக்கும், முந்தைய வேலைக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள். அது வரையில், உலகோடு எந்தச் சம்பந்தமும் இல்லாமல், நான் உண்டு, என் கணினி உண்டு என்று சமர்த்தாக புரொக்ராம் எழுதி, பூச்சி பிடித்துக் கொண்டிருந்தேன். பெங்களூரில் ஒரு நிறுவனத்தில் சேர்ந்த பிறகுதான், என்னை ஊர் ஊராகச் சுற்றவைத்து, தினம்தினம் புதுப்புது பிரச்னைகளை, புதுப்புது கஸ்டமர்களை சந்திக்க வைத்தார்கள். இந்த கதைகளும், அதை உயிர்ப்பிக்கும் கதாபாத்திரங்களும் அசாதாரணமானவர்களோ, அபூர்வமானவர்களோ அல்ல. அவர்களை நாம் எங்கோ சந்தித்திருக்கிறோம். இதைப் போன்ற கதைகள் நம் வாழ்வில் இருந்துதான் தோன்றுகின்றன. ஆனால், அந்த வாழ்க்கையை கசப்போ, காழ்ப்போ இல்லாமல் பார்க்க கூர்ந்த, ஆனால் முதிர்ச்சி கொண்ட ஒரு கவனம் வேண்டும். அதைப் பசப்போ, காவனையோ இல்லாமல் எழுதத் தனித் திறம் வேண்டும். வாழ்க்கையை ஒரு தத்துவமாகவோ, சித்தாந்தமாகவோ செய்து விடாமல், வாழ்க்கையாகவே சொல்ல ஜென் பௌத்தனைப்போல ஒரு மனம் வேண்டும்.
- பதிப்பகத்தார்.