காலப் பழமை கொண்ட தொல்காப்பியம் தம் கால இலக்கியங்களைக் கொண்டு இலக்கணம் படைத்துள்ளது.இதன் பின்னர் தோன்றிய சங்க இலக்கியங்கள் பழந்தமிழரின் பண்பாடு நாகரிகத்தை வடித்துத்தந்தன. அதனால் அவற்றை இலக்கியங்களாகப் பார்ப்பதோடு வரலாற்று ஆவணங்களாகவும் நோக்க வேண்டியுள்ளது. அவ்விலக்கியங்களில் பொருள் மாறாத்தன்மை, அமைப்பு மாறாத்தன்மை ஆகியவை அதன் நிலைத்த தன்மைக்குக் காரணங்களாக அமைகின்றன. அவ்வகையில் நோக்கும் போது தொல்காப்பிய இலக்கண அமைப்பிற்கு ஏற்பச் சங்க இலக்கியங்கள் இமைந்துள்ளனவா, அதன் துறை பகுப்பு முறை பொருத்தம் உடையதுதானா என்பதை ஆராய்ந்து அறிவது இன்றைய ஆய்வுலகில் தேவையான ஒன்றாகிறது. அத்தகைய வழியில் தொல்காப்பியரின் துறை பற்றிய செய்திகளை விளக்கிக் கூறுவதாக இக்கட்டுரை அமைகின்றது.