சங்க இலக்கிய காலம் தொட்டே, தமிழில் பெண்மையைப் பற்றிய வர்ணனைகளும் போற்றுதல்களும் சிறப்புற இருந்துள்ளன என்பதை இலக்கியங்களின் வாயிலாக அறிகிறோம். அகம், புறம் என்று இரு கூறாக வைத்து இலக்கியம் கண்ட நம் முன்னோர், அக இலக்கியங்கள் மூலம் பெண்களின் அழகையும் பண்பையும், புற இலக்கியங்கள் மூலம் வீரத்தையும் பாடி வைத்துள்ளனர். நாகரிகம் தழைத்த காலம் என்று போற்றப்பெறும் அக்காலத்தே தோன்றிய எட்டுத்தொகை நூல்கள் முதல் இன்றைய கவிதை நூல்கள் வரை, பெண்ணியத்தை மையமாகக் கொண்டு பாடப்பட்ட பாடல்கள் இந்த நூலில் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாமல், இன்றைய நவயுகக் கவிஞர்கள், குறிப்பாகப் பெண் கவிஞர்கள் எப்படி பெண்ணியத்தைப் பார்த்துள்ளனர் என்பதைச் சொல்லி, சங்க காலப் பாடல்களில் இதற்கு இணையான கருத்து எங்ஙனம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் சொல்லி, கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி அழகாக ஒப்புமை விருந்து படைத்துள்ளார். நமது தொன்மை அற நூலாகப் போற்றப்படும் திருக்குறள்கூட, மனித வாழ்வின் ஓர் அங்கமாகிய காமத்தை இன்பத்துப்பால் மூலம் கோடிட்டுக் காட்டுகிறது. அறம், பொருள், இன்பம் என்ற இந்த மூன்றும் வாழ்க்கையின் அங்கம் என்பதால், குறள் இம்மூன்றுக்குமான இயல்புகளை வெளிப்படுத்தியுள்ளது. கால மாற்றத்தால் நாகரிகம் மேம்பட்டுள்ள இக்காலக் கண்ணோட்டத்தில், ஆண் பெண் உறவு முறைகள், காதலுக்கும் காமத்துக்குமான வேறுபாடு போன்றவற்றில் எத்தனையோ மாறுதல்கள் ஏற்பட்டிருக்கின்றன. இருந்தபோதும், நூற்றாண்டுகள் பல கடந்து வந்துள்ள நம் சிந்தனை மரபு, எப்படி இன்றைக்கும் மாறாமல் எதிரொலிக்கிறது என்ற விளக்கத்தை இந்தப் பெண்வாசனையில் நாம் பார்க்கலாம். இந்தக் காலப் பெண்ணியக் கவிஞர்கள் வெளிப்படுத்தியுள்ள உள்ளக் குமுறல்களை எடுத்துக்காட்டி, பெண்வாசனை என்பதன் முகத்தை முழுதாக்கியுள்ளார் நூலாசிரியர் ஆண்டாள் பிரியதர்ஷினி. உரைநடையே கவித்துவமாக மலர்ந்துள்ள இந்தப் பெண்வாசனை படிப்போர் உள்ளங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி படிக்கும் தாகத்தை அதிகப்படுத்தும்.