அனுபவங்கள் மோசமானவையாக இருக்கலாம். அல்லது சிறந்தவையாக இருக்கலாம். ஆனால், இரண்டுமே முக்கியமானவை என்பதை உணர்நது, எதிர்கால சந்ததிக்கு அவற்றைப் பதிவு செய்ய வேண்டும் என்று மிக மிக சிலருக்குத்தான் தோன்றுகிறது. அல்லது வாய்ப்பு இருக்கிறது. அத்தகைய மிகச்சிலரில் தனித்தன்மையுடன் நினைக்கப்படுகிறவர் சே குவேரா. வாழ்க்கையை எப்படியெல்லாம் உபயோகமாக வாழலாம் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணமானது அவரது வாழ்க்கை. சொந்த மக்களின் சுதந்திரமான வாழ்க்கையைப் பறித்து, அவர்களுடைய உழைப்பைத் திருடிக் கொழுக்கும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தை ஒழிப்பதற்கான மருந்து, ஆயுதப்புரட்சிதான் என்பதை உணர்ந்து காஸ்ட்ரோவுடன் இணைந்தார். “நான் என்ற கருத்து, நாம் என்ற கருத்திடம் முழுமையாக பணிந்து விடுதல் என்று ஒரு சொற்றொடர் இருக்கிறது. போராடும் அமைப்பைச் சேர்ந்த அனைவரும் முழுமையாக ஒன்றுபடுவதைக் குறிப்பது இது. முன்பு, முட்டாள்தனமாகவும் பைத்தியக்காரத்தனமாகவும் தோன்றிய இந்தச் சொற்றொடர் இப்போது நினைவுக்கு வருகிறது. இதுதான் கம்யூனிஸ ஒழுக்க நெறி. நாம் என்பதின் துடிப்பை உணர்வதற்கு உதவக்கூடிய அழகான கருவியாக இதுதான் இருக்கிறது.”என்று அம்மாவுக்கு எழுதினார் சே.
தான் அறிந்த இந்த உண்மைக்காக உயிரைத் துச்சமெனக் கருதியவர் சே. ஏகாதிபத்தியம் எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கெல்லாம் தேடிச் சென்று வேரறுக்கப் போராடிய, தீரமிகு போராளி அவர்.