சிலப்பதிகாரம் வெறும் கற்பனைக் காப்பியமல்ல. அது, தமிழ்ச்சமுதாயத்தின்
இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட கலாச்சார மேம்பாட்டினையும், வாழ்க்கை
நெறிமுறை களையும் நம் கண்முன்னே நிறுத்துகின்ற வரலாற்று நூல். அத்தகைய
சிறந்த காப்பியத்தை ஒரு காலகட்டத்தில் நம் தமிழ்ச் சமுதாயம் மறந்திருந்தது.
அந்த மறதியைப் போக்கி, தமிழர் மேம்பாட்டிற்கு, சிலப்பதிகாரத்தின் தேவையை
உணர்த்திய பெருமைக்குரியவர் தலைவர் ம.பொ.சி. அவர்கள்.
சிலப்பதிகாரப் புகழ் பரப்பும் பணியிலே தன்னை ஈடுபடுத்திக் கொண்ட
சிலம்புச் செல்வர் ஐயா அவர்கள் நாடு முழுவதும் சுற்றிச் சுழன்று பட்டி
தொட்டிகளிலெல்லாம் ஆற்றிய சொற்பொழிவுகளும், பத்திரிகைகளில் எழுதிய
கட்டுரைகளும் ஏராளம். சொற்பொழிவுகளின் சுருக்கங்களும் கட்டுரைகளுமாக
'செங்கோலில்' மட்டும் இடம் பெற்றவைகளை ஒன்று திரட்டி நூலாக வெளியிட
எண்ணினோம். தலைவர் அவர்களிடம் அனுமதி கேட்டோம். அன்புடன் இசைந்தார்கள்.
சிலப்பதிகாரத் திறனாய்வு என்ற இந்நூலின் முதற்பதிப்பு சிலம்புச் செல்வர் ஐயா ம.பொ.சி. அவர்களின் 68-வது பிறந்த நாளில் வெளிவந்தது.