திருச்சி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஶ்ரீரங்கம், சமயபுரம், திருப்பட்டூர், மலைக்கோட்டை உள்ளிட்ட முக்கிய கோயில்களில் விதிகளை மீறி கடைகள் உள்ளன. இதற்கிடையே மதுரையில் நடந்தது போல் அசம்பாவிதம் வேறு எந்தக் கோயிலிலும் நடந்து விடாமல் இருக்க வேண்டும் என இந்து அறநிலையத்துறை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இந்நிலையில் திருச்சி ஶ்ரீரங்கம், மலைக்கோட்டை, திருப்பட்டூர் உள்ளிட்ட பிரபல கோயில்களில் உள்ள கடைகளை அகற்ற அறநிலையத்துறை கெடு விதித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஶ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலின் 21 கோபுரங்கள், பதினாறு கால் மண்டபம் மற்றும் நான்கு கால் மண்டபம் உள்ளிட்டப் பகுதிகளில் உள்ள 20 கடைகளின் உரிமையாளர்களுக்கு இந்து அறநிலையத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில், “ஓரிரு தினங்களுக்குள் கடைகள் அகற்றிட வேண்டும். இல்லாவிட்டால் அறநிலையத்துறை சார்பில் கடைகள் அகற்றப்படும்” என கூறப்பட்டுள்ளது. இதேபோல் மலைக்கோட்டையில் உள்ள 50 கடை உரிமையாளர்களுக்கும், சமயபுரத்தை அடுத்த திருப்பட்டூர் பிரம்மாகோவிலில் உள்ள கடைகளின் உரிமையாளர்களுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளன.