செய்யுள் பாடத் தெரிந்தவர்களுக்கு நல்ல பாட்டு இது, பிழையான பாட்டு இது
என்று வேறு பிரித்து அறிய முடியும். அதோடு மற்றொரு முக்கியமான லாபம் உண்டு
நல்ல கவிதையை நன்றாக அனுபவிக்க முடியும்ராக லட்சணம் தெரிந்தவன் சங்கீதத்தை
மற்றவர்களைவிட நன்றாக அனுபவிப்பது போல அநுபவிக்கலாம் எதுகை மோனை அழகையும்,
ஓசையினிமையையும், யாப்புக்குரிய இலக்கணங்கள் அமைந்திருக்கும் சிறப்பையும்
உணர்ந்து இன்புறலாம் சந்த இன்பம், ஓசையினிமை, தொடைநயம் என்று வேறு வேறு
வகையாகச் சொல்லும் அழகுகள் இன்ன என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொண்டு
மகிழ்ச்சி அடையலாம்.
யாப்பிலக்கணத்தை முறையாகக் கற்றுக் கொள்ள வேண்டுமானால் ஓர் ஆசிரியரிடம்
நேரே இருந்து பாடம் கேட்க வேண்டும். ஆனால் எதற்கும் எளிதான முறை வந்து
விட்ட காலம் இது. ஆகையால் சம்பிரதாய முறைப்படி கற்றுக் கொள்ள
முடியாதவர்களுக்கு ஓர் அளவு கவிபாடுவது எப்படி என்பதைச் சில கட்டுரைகளால்
சொல்லலாம் என்று எண்ணுகிறேன். என்னுடைய அநுபவத்தில், இப்படிச் சொன்னால்
படிப்படியாக விளங்கும் என்று உணர்ந்த ஒரு புது வழியைப் பின்பற்றி, இந்தக்
கட்டுரைகளை எழுதியிருக்கிறேன்.