மார்க்ஸிஸ்ட் தோழர்கள் நடத்தும் உரையாடல் மற்றும் எழுத்தில் அதிகமாகப் புழங்கும் ஒரு வார்த்தை – வர்க்க உணர்வு. தொழிற்சாலைகளில் வேலைசெய்யும் பாட்டாளிகளிடம்தான் புரட்சிக்கு அவசியமான வர்க்க உணர்வு இருக்கும் என்றும், அவர்கள் முன்னெடுத்துச் செல்வதுதான் ஒரிஜினல் புரட்சி என்றும், கார்ல் மார்க்ஸ் எழுதினார். நூற்றைம்பது ஆண்டுகளுக்குப் பிறகும் அது நடக்கவில்லை. தோழர்களே அந்தப் பாடத்தைத் திருத்தித் திருத்தி எழுதிக்கொண்டு இருக்கிறார்கள். இருந்தாலும் இந்த வார்த்தை நிலைத்துவிட்டது.
பல வருடங்களாக மீனவர்களோடு தொடர்ந்து பழகியதில், அவர்களுடைய வர்க்க உணர்வு என்னோடு கலந்துவிட்டது. எதையும் தரை வழியாகப் பார்ப்பதை விட்டுவிட்டுக் கடல் வழியாகப் பார்ப்பது என்பது இதன் முக்கியமான கூறு. ஒவ்வொரு நாளும் மீன்பிடித் தொழிலுக்கு உகந்ததா என்பதுதான் அவர்களுக்குக் காலைநேரத் தலைப்புச் செய்தி. மற்றவை எல்லாம் அப்புறம்தான்.
மீன்பிடித் தொழிலை அடுத்து, அச்சுத் தொழிலுக்கு வந்தேன். மையோடும், காகிதங்களோடும், மைபூசிய மனிதர்களோடும், இரவுபகலாக உறவாடியதில் கொஞ்ச காலத்துக்கு அச்சுத் தொழிலாளியின் வர்க்க உணர்வு என்னோடு இழுசிக்கொண்டது. எத்தனை எழுத்து, எவ்வளவு இடைவெளி, எத்தனை படிகள் என்பவை முக்கியமான விவரங்கள்.
அச்சுத் தொழிலாளி என்பவரது வாழ்க்கை, வறுமைக் கோட்டுக்குக் கொஞ்சம் மேலே இருக்கும் என்று சொல்லிக் கொள்ளலாம். இரவு பகல் தூங்காமல் கண் விழித்து, ஓவர்டைம் செய்து, கட்டிங் மிஷினில் கைவிரல்களை இழந்தவர்களும் உண்டு. வர்க்கம் கடந்து, பிரதேசம் கடந்து, இந்தியர்களை, குறிப்பாக ஏழைகளை அதிகமாகக் கவரும் மோகினி ஒன்று உண்டு – சாராயம். அது இவர்களையும் தாக்கி இருக்கிறது என்பதை அறிந்துகொண்டேன்.