'கூண்டுக்கிளி' என்னும் இந்நூல். நூலில் ஏழு கதைகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு கதையும் உள்ளங்களில் ஊடுருவிப் பாய்ந்து உணர்வு என்னும் ஒளித்தடங்களைப் பதிப்பன. சமூகப் பாதிப்புகள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள். சாதி மத வெறித்தனங்களால் அடக்கி ஆளப்படுகின்றவர்கள் பற்றிய படைப்பாளரின் சிந்தனை ஆழம் மிகுந்தது. தீண்டத்தகாதவன் என்ற புதினத்தைச் சிறுகதையாக்கிப் புரிய வைத்திருக்கும் பாங்கு மிகவும் ஏற்றுக்கொள்ளத்தக்கது.
''முகமதியர்கள் எங்களைத் தொடக் கூச்சப்படுவதில்லை. இந்துக்களும் எங்களைப் போல் தோட்டிகள் அல்லாத மற்ற ஜாதிக்காரர்களும்தான் எங்களைத் தொடக் கூச்சப்படுகிறார்கள்'' என்று தீண்டாமையின் தீய செயல்கள் ஒரு தோட்டிச் சிறுவனின் வாயிலிருந்து தீக்கனலாக வந்து சமுதாயத்தை உஷ்ணப்படுத்துகிறது. ஜிலேபி தின்றுகொண்டே நடந்துவந்த தோட்டிச் சிறுவன் எதிரே வந்த உயர்சாதிக்காரன மீது மோதிவிட்டதால் தீட்டுப்பட்டுவிட்டதென்று சிறுவன் மீது பொழியப்பட்ட இழிமொழிகள்தான் எத்தனை.... எத்தனை? அந்தத் தீண்டாமை உணர்வு மாறவேண்டும் என்பதே படைப்பாளரின் சிந்தனை.