ராமாயணமும் மகாபாரதமும் இந்துக்களின் இரண்டு கண்களாக விளங்குகின்றன. அத்தகையவற்றில் ஒன்றான இராமாயணத்தை வடமொழியில் வால்மீகி முனிவர் அருளிச் செய்தார். அதனை தமிழ் மக்களுக்கு தமிழ் மொழியில் மொழிபெயர்த்துத் தந்தவர் கம்பர். எனவே தான் அந்நூலுக்கு கம்பராமாயணம் எனப் பெயரேற்பட்டது - இவையனைத்தும் தமிழ் மக்கள் மட்டுமன்றிப் பிறரும் அறிந்தவையே.
கம்பராமாயண பெருங்காப்பியத்தின் முழுக் கதையைச் சுருக்கமாகவும், அதேசமயம் கதை அமைப்பு விடுபடாமலும், எளிய தமிழ் நடையிலும், தேவையான செய்யுள் (பாடல்)களுடனும் சிறப்புற அமைந்துள்ள கம்பராமாயணம் உரைநடை என்னும் நூல்.
மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய வகையில், இந்நூல் உரைநடையில் சுருக்கமாய் அமைக்கப்பட்டுள்ளது, இதன் தனிச் சிறப்பாகும். இந்நூலைப் படித்து மாணவர்கள் இலக்கியச் சுவையை இனிதுற உணரலாம். ஏனையோரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது.
கம்பராமாயணக் கதையைப் பல ஆசிரியர்கள் தங்கள் நூல்களில் பாங்குற எடுத்துச் சொல்கின்றனர். அவ்வரிசையில் கம்பராமாயணம் உரைநடை நூல் இடம்பெறும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. இத்தகைய சிறப்புமிக்க இந்நூலினை அனைவரும் வாங்கிப் படித்துப் பயன்பெற வேண்டுகிறேன்.