தமிழக அரசு தலைமைச் செயலகத்தில் முப்பத்து நான்கு ஆண்டுகள் பணியாற்றி அரசு
துணைச் செயலாளராக ஓய்வு பெற்றேன். நான் பணியாற்றிய காலத்தில், தலைமைச்
செயலகத்தில் கலைக்குழு ஒன்றைத் தொடங்கினேன். இதன் தொடக்க விழாவிற்கு அன்றைய
தமிழக கவர்னர் மோகன்லால் சுக்காடியா தலைமை தாங்கினார். அவருக்குப் பின்
வந்த தமிழக கவர்னர் பிரபுதாஸ் பட்வாரி இக்கலைக்குழுவுக்கு நிதியுதவி
வழங்கினார். நான் எழுதி நடித்த நாடகங்களில் 'குற்றவாளிகள் சிறையில் இல்லை'
என்ற நாடகத்தை இந்து நாளேடு பாராட்டி எழுதியது. திரைப்படக் கதைகளை ஆய்வு
செய்வதிலும் எழுதுவதிலும் எனக்கு அதிகப்படியான ஆர்வம் உண்டு. பல திரைப்பட
இயக்குனர்களிடம் பணியாற்றி இருக்கிறேன். நான் எழுதிய “காத்தும் கடலும்'
என்ற திரைப்படக் கதையை திரைப்பட மாக்குகின்ற முயற்சியில் ஈடுபட்டுக்
கொண்டிருக்கிறேன். கடலோரக் கதைகளை எழுத வேண்டும் என்பதில் எனக்கு ஆர்வம்
அதிகமாக உள்ளது. நிறையப் புத்தகங்களைப் படிக்க வேண்டும், எழுத வேண்டும்
சமூகப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்பதே எனது லட்சியம்.