குளிர்கால மென்பனியில் வீசும் மெல்லிய காற்றின் நடுக்கத்தில் மரம் நழுவிப் பெய்து கொண்டிருக்கிற மலர் மழையை அனுபவிப்பதைப் போல, மாதங்கியின் கவிதைகளை வாசிக்கையில் ஒரு அலாதியான சிலிர்ப்பும் சுகமும் ஏற்படுகிறது. இக்கவிதைகள் அன்பின் உன்னதத்தையும், மனிதத்தையும், வாழ்வின் நிதர்சனங்களையும் பாடுபொருளாகக் கொண்டிருக்கின்றன. மாதங்கியின் மொழியாளுமை கொண்ட பிரயோகத்தில், இருளாழத்தில் ஓசையற்று ஊடுருவிப் படரும் ஒளியாக இக்கவிதைகள் நம் மனதில் இடம் பிடிக்கின்றன. சிங்கப்பூர் சூழலில் பல ஆண்டுகள் வாழ்ந்ததின் பிரதிபலிப்பாக அந்நிலம் சார்ந்தவைகளையும் கவிதையாகப் பதிவு செய்திருக்கிறார் மாதங்கி. அதேசமயம், சொந்த மண்ணின் பண்பாட்டு மாற்றங்களையும், இயந்திர கதியாக பாசாங்குடன் வாழ நேர்ந்து விட்டது பற்றியும், இயற்கை குறித்தான ஆர்வத்தோடும் இவரது கவிதைகள் பதிவாகியிருக்கிறது. வாசிக்கும் மனதின் ரகசிய இழைகளை மென்மையாய் மீட்டுபவையாக இக்கவிதைகள் உள்ளன.