கவிதை, காலத்தின் சாட்சியாக இருக்க வேண்டும் என்பர். உண்மையில்,
அச்சிதழ்களும் மின்னிதழ்களும் இன்னும் பற்பல ஊடகங்களும் காலத்தின்
சாட்சியாகத்தான் இருக்கின்றன. அப்படியானால், கவிதைக்கும் அவற்றுக்கும்
என்னதான் வித்தியாசம்? இந்தக் காலத்தில் இவ்வாறு நடந்தது என்பது, ஒரு
செய்திப் பதிவு. அந்தச் சம்பவத்தைக் கவிதையாகப் பரிமளிக்கச்
செய்வது,கவிஞரின் மனம். அந்த வகையில் சாந்தி மாரியப்பனின் கவிதைகள்,
மனசாட்சியுடன் கூடிய காலத்தின் சாட்சியாக ஒளிருகின்றன. நிழற்படக் கலைஞரான
இவரது கவிதைகளிலும் காட்சிப் படிமங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. அன்றாட
வாழ்வில் கவனிக்கத் தவறும் நுணுக்கமான கூறுகள், எளிய நிகழ்வுகளில் உள்ள
அழகியல், மனிதர்களின் பல்வகை உணர்வு வெளிபாடுகள் என தனித்துவம் வாய்ந்த
பார்வையுடன் புதிய கோணங்களில் நவீன வாழ்வை வெளிப்படுத்துபவை இக்கவிதைகள்.